Saturday, August 8, 2015

மெலுஹாவின் அமரர்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையிலுள்ள விஜயா பதிப்பகத்திற்கு புத்தகம் வாங்கச் சென்றபோது எதேச்சையாக அறிமுக  எழுத்தாளர் அமீஷ் எழுதிய  'மெலுகாவின் அமரர்கள்' புத்தகத்தை பார்த்தேன். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை படைத்திருப்பதாக நூலில் விளம்பரம் இருந்தது. எழுத்தாளர் சசிதாரூர் அவர்களும், மனதை கட்டிப் போடும் எழுத்து நடை என்று பாராட்டு தெரிவித்திருந்தார். சிவபெருமான் குறித்து அற்புதமான நாவல் என்று ஆங்கில இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். ஆங்கிலத்தில் மாபெரும் வெற்றிபெற்று தற்போது தமிழிலும் மொழிபெயர்ப்பாகி விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்று சில நண்பர்கள் சொன்னார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கிப் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் அமீஷின் எழுத்துநடை மனதை கொள்ளை கொண்டது. சிவபெருமான் குறித்த புராணக் கதைகளை பல வருடங்கள் ஆழ்ந்து படித்துள்ளார். இப்படியொரு மனிதன் (சிவன்) பாரத தேசத்தில் வாழ்ந்திருக்கிறாரா என்று எண்ணிப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது!

சிவன் சதி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன் நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம். மூன்று பாகங்கள் கொண்ட இந்த படைப்பில் தற்போது இரண்டாவது பாகமான "நாகர்களின் ரகசியம்" படித்துக் கொண்டிருக்கிறேன்..