Saturday, July 27, 2013

தற்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த வேளையில்

ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?

சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற  ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.

ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?

சிவாஜி:அரசியல் வேறு,நடிப்பு வேறு.நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான்
முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு.சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு.உதரணமா எனக்கு இரண்டுமாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம்.ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது.எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி,நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது.அது வேறு,
இது வேறு.

ஜெயலலிதா:தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?

சிவாஜி:எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு.
அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு.
இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே
ஏறினாள்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.

ஜெயலலிதா:மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?

சிவாஜி:நல்ல கேள்வி.கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்.ஏன்னா கப்பலோட்டிய
அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது.பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார்.ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.

ஜெயலலிதா:நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?

சிவாஜி:அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.

ஜெயலலிதா:அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?

சிவாஜி:ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.

வலைப்பூ:www.sevaliye-sivaji.blogspot.com

Friday, July 26, 2013

உயிர் காக்கும் உத்தமர்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் அருகே உள்ள
மலைப்பாங்கான இடம் "திகேப்"

1800 ம் ஆண்டுகளில் இருந்தே இங்கு வந்து குதித்து தம்
உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் தற்கொலைப் பிரியர்கள்.
அங்கிருந்த சில நூறு அடித் தொலைவில் வசிப்பவர்
84 வயதுடைய தாத்தா டான் ரிச்சி.

அதிகாலையில் தன் வீட்டுச் சன்னலைத் திறந்து தற்கொலை
இடத்தின் மீது தன பார்வையைச் செலுத்த
ஆரம்பித்து விடுகிறார் இந்த தாத்தா.

யாராவது தற்கொலை செய்வதற்காக வருவதாகத் தெரிந்தால்
தம் ஊன்றுகோல் உதவியுடன் வேகமாக அவர்களிடம் சென்று
பேச்சு கொடுக்க ஆரம்பிப்பார்.
"ஏன் என்னுடன் நீங்கள் ஒரு கப் தேநீர் குடித்துவிட்டு
போகக் கூடாது" என்று கேட்பார்..மெதுவாக அழைத்து வந்து
அவர்களிடம் பேசி அவர்களை மனம் மாற வைத்துவிடுகிறார்..
இப்படி இவர் காப்பாற்றிய உயிர்களின் எண்ணிக்கை 160 பேர்.
(தினகரன்,மதுரை-16.06.2010)

காப்பாற்றும் போது இவரையும் இழுத்துக் கொண்டு 
குதித்த நிகழ்ச்சி - காப்பாற்றப்பட்ட சிலர் இவருடன் வந்து 
சண்டைபோடும் நிகழ்ச்சி 
இப்படி பல நிகழ்ச்சிகள் நடந்தும் 
மனம் தளராமல்பணி செய்கிறார் ரிச்சி...

Thursday, July 25, 2013

ஏளனத்தை கண்டு அஞ்சாதவர்!


அமெரிக்காவின் அதிபராக ஆபிரகாம் லிங்கன் உயர்ந்திருந்த நேரம்.

"ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் அதிபரா?" என ஒரு மேட்டுக்குடித் திமிர் பிடித்த ஒருவன் லிங்கனைக் கேலி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் "நான் அணிந்திருக்கும் செருப்பு உன் அப்பா தைத்தது தான்" என்றானாம்.



உடனே அவனுக்குப் பதில் சொன்ன லிங்கன்-
"இதிலிருந்து புரிகிறது என் தந்தை ஒரு சிறந்த 
தொழிலாளர் என்பது!இவ்வளவு நாளாக
உழைத்து வருகிறதே;பராவாயில்லை!
அது அறுந்து விட்டால் என்னிடம் கொண்டுவா;
நான் தைத்துத் தருகிறேன்.
ஏனென்றால் எனக்குச் செருப்புத் தைக்கவும் தெரியும்" என்றாராம்.

கேட்டவர் தலையைக் குனிந்து கொண்டு
நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

தாழ்வு மனப்பான்மை இன்மை - தொடர் தோல்விகளில்
மனம் தளராமை - கேலிப்பேச்சால் ஒடிந்து போகாமை...
இப்படிப் பாடம் கற்பிக்கும் நிகழ்வுகளை
லிங்கன் வாழ்வில் இருந்து ஏராளம் எடுத்துச் சொல்லலாம்.

வலைப்பூ:www.Senthilkrisnan.blogspot.com

புரட்சியின் உரத்த குரல்!


நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோ விழாக்கோலத்தில் மிதந்து கொண்டிருந்தது.காரணம் அன்று டிசம்பர் 10.நோபல் பரிசு வழங்கப்படும் தினம்.பரிசு பெற்றவர் மிக முக்கியமான மாமனிதர் அவர்தான் மார்ட்டின் லூதர்கிங்!

"அமைதிக்கான நோபல் பரிசு" ஒரு கறுப்பரின் கரங்களில் தரப்பட்டது என்பது வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு.

இன விடுதலைக்கான முழக்கம் அமெரிக்கா எங்கும் ஓங்கி - ஒலித்து - உயர்த்தி - எழுச்சி பெற்ற நேரம் அது.

அகிம்சை வழியில் இனவிடுதலைக்காக
அணி திரட்டும் தம் தலைவனின் போராட்ட நகர்வுகளுக்காக
பேருந்துகளைப் புறக்கணித்து... கறுப்பின மக்கள் அனைவரும்
போராட்டத்தை நடத்தி உரமேற்றிக் கொண்டிருந்த காலம் அது.

"இன அநீதி என்ற நீண்ட இரவுக்கு முடிவுகட்ட
அமெரிக்காவின் 22 மில்லியன் கறுப்பின மக்கள்
ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்
இந்த நேரத்தில் அமைதிக்கான நோபல் பரிசை
நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்... என்று தொடங்கியது-
மார்ட்டின் லூதர்கிங்கின் ஏற்புரை...

ஒட்டுமொத்த கறுப்பின மக்களின்
போராட்ட நகர்வையும் பதிவு செய்தது அவ்வுரை...
இன்றுவரை மிகமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வலைப்பூ:www.Senthilkrisnan.blogspot.com

இலட்சியத்திற்கான தியாகம்!

சிந்து நதிக்கரையில் போரஸ் மன்னனை வீழ்ச்சி அடைய வைத்து விட்டு நிமிர்ந்து நின்றார் அலெக்ஸாண்டர்.படைகள் தளர்ச்சி அடைந்தன.படைகளை திருப்பலாம் என மன்னனிடம் முறையிட்டார்.

இந்தியா முழுவதையும் வென்று விட்ட பிறகே தாய்நாடு திரும்புவேன் என்பதில் உறுதியாக இருந்தார் அலெக்ஸாண்டர்.

படை ராஜஸ்தானில் மாட்டிக்கொண்டது.
அனைவரும் தங்களுக்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தனர்.இரக்கம் அற்றவர்;இதயத்தை ஏததென்சிலேயே இறக்கிவைத்தவர்..இப்படி திட்டிக் கொண்டே நடந்தனர்.இப்போது ஒரு பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதை கண்ட வீரன்...
மணலில் இருந்து அதைப் பிரித்து,தம் இரும்புத் தொப்பியில்
அள்ளி தம் தலைவனிடம் நீட்டினான்.

அலெக்ஸாண்டர் சொன்னார்:
இந்தத் தண்ணீரைவிட ஈரப்பசை மிக்க
உள்ளம் வாய்ந்த என் அன்புத் தோழனே!நன்றி.
எல்லோரும் குடிக்க நீர் இருந்து.குடித்த பின்
எஞ்சியிருந்தால் மட்டுமே நான் குடிப்பேன்.
இல்லையேல் எல்லோரோடும் சேர்ந்து இறந்துபோவேன்
வீரர்கள் சிலிர்த்தனர்;தம் தலைவனைப் புகழ்ந்தனர்.

Wednesday, July 24, 2013

அனுபவம் தந்த லட்சியம்!


மாலை நேரம்: " நண்பர்கள் இருவரும் விளையாட வரவில்லையே!"
வாசலையே பார்த்துக் கொண்டிரு ந்தார் மார்ட்டின் லூதர் கிங்.
நேரம் ஆக ஆக வராததால் வருத்தமுற்று அவர்களை கூப்பிட்டு வர ஓடினார்.தம் வீட்டுத் தெருவிலே இருந்த பலசரக்குக்கடையின்
தம்பதியினரின் குழந்தைகள் இருவரும் தான் மார்ட்டின் லூதர்கிங்கின் நண்பர்கள்- விளையாட்டுத் தோழர்கள்.


பலசரக்கு கடைக்குச் சென்ற லூதர்கிங்,
அவர்களை விளையாடக் கூப்பிட
பலசரக்கு கடைத் தம்பதியினர் லூதர்கிங்கிடம்
"உன்னோடு எல்லாம் விளையாட வரமாட்டார்கள்.
இங்கு நிற்காதே-போ போ! என நாயை
விரட்டுவது போல விரட்டினர்.

'ஏன்' என்று கேட்ட சிறுவனிடம்
'நீ' கருப்பன் என்றனர்.
புரியாமலும் - சினமுற்றும் - அழுகை பீறிட்டும்
வந்த சிறுவன் அன்று எடுத்த உறுதிதான்
பின்னாளில் 1.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட
கறுப்பர்களுக்கு விடியலுக்கான வாசலாய் அமைந்தது.

உச்சத்தில் நிறுத்திய கடிதம்!

முதல் உலகப்போருக்குப்பின் ஏற்பட்ட தோல்வியால்
கோபக்கனலாய் இருந்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.தமது
கட்சியினர் - எதிர்க்கட்சியினர் என அனைவரையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.

சர்ச்சில் மீது அனைவருக்கும் வெறுப்பு ஏற்பட்டது.அவர் மீது கோபத்தை வெளிக்காட்ட இயலாமல் அதே வேளையில் அவரை மரியாதை இல்லாமல் பலரும் பேசவும் ஆரம்பித்தனர்.

மகத்தான போர்வீரர் - பாராளுமன்ற உறுப்பினர் - மேடைப்
பேச்சாளர் - எழுத்தாளர் - சிந்தனையாளர் - விளையாட்டு வீரர்
என அரசியல் தளத்திலும் - இலக்கியத் தளத்திலும் தான்
மிக உயரத்தில் வைத்துள்ள வின்சென்ட் சர்ச்சிலுக்கு
அவரது சூழலை உணர்த்த விரும்பினார் பெர்னாட்ஷா..

அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்-
எனது புதிய நாடகம் ஒன்று நடைபெற உள்ளது
இத்துடன் இரண்டு நுழைவுச் சீட்டுகளை
அனுப்பியுள்ளேன்.ஒன்று உங்களுக்கு..
இன்னொன்று உங்கள் நண்பருக்கு..
அப்படி யாராவது இருந்தால்!

இதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்டார் சர்ச்சில்.
காட்டசாட்டமாக பதிலும் எழுதினார்.பின்பு ஆழமாகச்
சிந்தித்தார்-புதுவியூகம் அமைத்தார் - பின்னாளில்
அரசியல் தளத்தில் இங்கிலாந்தின் பிரதமரானார்.
இலக்கியத் தளத்தில் நோபல் பரிசு வென்றார்.

இந்திய திரை உலகின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம்

நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்'. ஒளியையும் மொழியையும் மாற்றி புதிய கதவைத் திறந்தவர். உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக 'நாயகன்' டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது. மிகப் பெரிய கவுரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது, அதைத் தடுத்தவர் மணிரத்னம்..

தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பார். பாட்டும், ஆட்டமும் அவசியம் உண்டு.  


கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால், கடிகாராத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார். மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். பக்கா மதுரைக்காரர். ஜூன் 02 பிறந்த தினம்.

தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியாக்சன் காட்டவே மாட்டார். இரண்டையும் புரம் தள்ளிவிடுகிற இயல்புடையவர்.

கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக்கும். சந்தேகம் இருந்தால் மட்டும் ராக்கெட்டோ ஜாக்கெட்டோ சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்வார்.

முழு ஸ்க்ரிப்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே.
பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்கிரிப்ட் கம்ப்யூட்டர் மயமாகிவிடும்.

படம் ரிலீசான தினத்தன்று கொஞ்சம் கூட டென்சன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்.

நந்தனுக்கு பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத்தான் இந்த விடுமுறை. காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக சீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்ய தூண்டுவார்.

படத்துக்கு பூஜை, கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் இப்படி எதையும் பார்க்கமாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்.

பாலாவின் பிதாமகன், நான் கடவுள் படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை. தன்னிடம் இருந்து எந்த ஒரு அசிஸ்டன்ட் வெளியே வாய்ப்பு தேடி போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையை கொடுத்து, வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுவார்.

மனைவியை எப்போதும் 'ஹாசினி' என்றே அழைப்பார். சுஹாசினியும்
இவரை சிம்பிளாக 'மணி' என்றே அழைப்பார். பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினையைப் பார்த்து 'எனக்குப் பெண் குழந்தை பிடிக்கும்' எனச் சொல்லும் சீன் இருக்கும்.

மணிரத்னம் அவர்கள் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. கலெக்டர் அர்ஜூனாக அரவிந்த்சாமி நடித்த தளபதி படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது.

மணிரத்தனம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது "இருவர்". பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார். நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக்காட்ட மாட்டார்.அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு, தேவையான கரெக்ஸன்களை மட்டுமே கொடுத்து படமாக்குவதையே விரும்புவார்.

மணிரத்னம் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும். கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்கு புரிபடும் இந்த உண்மை. தனிமை விரும்பி. அவரைத் தெரிந்து கொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்.

மணிரத்னம் அவர்களின் மானசீக குரு அகிரா குரோசோவா. அவரது படங்களை திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு. கொடைக்கானலில் மணிரத்னம் அவர்களின் கனவு இல்லம் கிட்டத்தட்ட தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்.

மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக 'ரியல் இமேஜ்' ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது சந்தித்து பேசி சிரித்து மகிழ்வது வழக்கம்.

உடை தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் விழாவாக இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்.

Tuesday, July 23, 2013

சொற்களுக்காக வாழ்ந்த மனிதர் - சாக்ரடீஸ்

மரண தண்டனை பெற்ற விஷக்கோப்பையைக்
குடிக்கத் தயாராகிக் கொண்டிருந்த சாக்ரடீஷின் முன்
வந்து விழுந்தது துண்டு சீட்டு.

அவருடைய நபிக்கைக்குரிய நண்பர்கள்
அனுப்பியது தான் என்பதை உறுதி செய்து கொண்டார் சாக்ரடீஸ்!!

கடுமையான காவலைத் தாண்டி அவரைத் தப்புவிக்க
வழிமுறையும் - வழிகாட்டியும் அதில் இருந்தன.
அதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் பாதுகாப்பாய் அவர் வாழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்தார் சாக்ரடீஸ்.

அவர் அதற்கு உடன்பட மறுத்தார்.தம் நண்பர்களுக்கு பதில் அனுப்பினார்-
"ஏதென்ஸ் நகர மக்களின் நல்வாழ்க்கைக்காக,நாளும் பேசி, அவர்களை சிந்திக்க வைக்க நாம் இந்தத் தவற்றைச் செய்தால் அது முன் மாதிரியாக அமையாது.இந்த நகரச் சட்டத்திற்குட்பட்டு நான் சாவைத் தழுவிக் கொள்வதில் பெருமையடைகிறேன்!!".

நாட்டைக் காக்கும் நல்லவர்கள் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்

1928 - ம் ஆண்டு திருச்சியில் 'வெள்ளையனே வெளியேறு' போரில் கலந்துகொண்ட சின்னையாமன்றாயர் கைது செய்யப்பட்டு சிறைக்கம்பிகளுக்குள்  நுழையும்போது ஒருவர் ஓடிவந்து விழுப்புரத்தில் அவர் மனைவி ராஜமணியம்மாள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இனிய செய்தியைச் சொல்ல...
மகிழ்ச்சி ஒருபுறம்,மகனை அள்ளி எடுத்து முத்தமிட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருபுறம்,இருந்தாலும் அவர் வாய் மலர்ந்து;"நாட்டைக் காக்கும் நல்லவர்கள் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்" என்று நண்பனிடம் கூறிவிட்டு 
சிறைபுகுந்தார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தபோது பெற்ற முதல் வாழ்த்து,
அதுவும் தந்தையின் வாழ்த்து,இந்த முதல் வாழ்த்து செய்தியே எத்தனை அர்த்தம் பொருந்தியது பாருங்கள்."நாட்டைக் காக்கும் நல்லவர்கள் அவனைப்  பார்த்துக் கொள்வார்கள்".ஆமாம் அவர் பிறந்தது முதல் அரசு மரியாதையுடன் இயற்கையுடன் இயற்கையானது வரை பெரியார்,அண்ணா, கருணாநிதி, காமராஜர்,இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர்,ராஜீவ்காந்தி வரை நாட்டைக் காத்த 
எத்தனை நல்லவர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது என்பதைச் சற்று 
எண்ணிப் பார்த்தாலே தெரியும்.

வலைப்பூ:www.sevaliye-sivaji.blogspot.com

நடிப்புக் கலையின் பிரதிநிதி!!

மாநகராட்சி மேயரை முதல் மனிதன் என்று அழைப்பார்கள்.அதுபோல இந்தியாவின் முதல் கலைஞன் என்று அழைக்கப்பட வேண்டியவர் நடிகர் திலகம் சிவாஜி.சிவாஜியின் 'வியட்நாம் வீடு' நாடகம் மியூசிக் அகாடமியில் நடந்த சமயம் ஒரு ரூபாய் டிக்கெட்டில் அந்த நாடகத்தை நான் பார்த்தேன்.நாடகம் முடிஞ்சி முக்கால் மணி நேரம் சிலையாக அரங்கிலேயே உட்கார்ந்துகிட்டு இருந்தேன்.கலைமகள் சரஸ்வதியைக் கலைக்குப் பிரதிநிதியாக நாம் வழிபடுகிறோம்.அது மாதிரி நடிப்புக் கலைக்குப் பிரதிநிதியாக வணங்க வேண்டியவர் சிவாஜி.சிவாஜியின் அரசியல் சேவையோடு ஒப்பிட்டால்,இந்த எம்.பி.பதவி அவருக்கு ஒரு சாதாரண ஆரம்பம்.


 - இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்...

Wednesday, July 10, 2013

கரன்சி கல்லூரிகளின் தில்லு முல்லு..

மக்களின் பொதுநலன் கருதி..
ஜூனியர் விகடன் வார இதழில் 07.07.2013 அன்று..

மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி கேப்டன் "தோனி" பிறந்த தினமன்று வெளியான சூப்பர் ஸ்பெஷல் கட்டுரை..  

சில தினங்களுக்கு முன், கல்வி ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது.. 1014 மதிப்பெண்கள் வாங்கிய தங்கள் மகனுடன் அவரைச் சந்திக்க வந்திருந்த்தனர் கரூரைச் சேர்ந்த பெற்றோர். திண்டுக்கல் பக்கத்துல ஒரு காலேஜ்ல நூறு சதவிகிதம் பிளேஷ்மன்ட் என்று விளம்பரம் வந்திருக்கிறது. அந்தக் காலேஜ்ல எங்க பையனை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்க்கலாமா சார்..? படிச்சு முடிச்சதும் வேலையோட வெளியில வருவான் இல்லையா..? என்று கேட்டனர், அந்தப் பெற்றோர். அதற்கு கல்வி ஆலோசகர்.. நூறு சதவிகித பிளேஷ்மன்ட் என்பது ஏமாற்று வேலை. அது சாத்தியமே இல்லை. பைனல் இயரில் 250 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அதில்.. அரியர் இல்லாமல் இருப்பவர்கள் இருநூறு பேர் இருப்பார்கள். அந்த இருநூறு பேரில் மேற்படிப்பு தொடர இருப்பவர்கள் எழுபத்தைந்து பேர்தான் இருப்பார்கள். மீதி இருக்கும் 125 பேருக்கு வேலை வாங்கித் தருவார்கள். அதுவும் அவர்கள் படித்த படிப்புக்கான வேலையாக இருக்காது. சாதாரண (பி.பீ.ஓ) BPO கம்பெனிகளிலோ, மார்கெட்டிங் வேலையோ ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வாங்கித் தருகிறார்கள். கல்லூரிகளுக்கு இதுபோன்ற வேலைகளை வாங்கித் தரும் ஏஜென்சிகள் ஏராளமாக உள்ளன. அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார்கள்.  

நீங்கள் அந்த கல்லூரிக்குச் செல்லுங்கள். கடந்த ஆண்டு எத்தனை பேருக்கு 
பிளேஷ்மன்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பதை விசாரியுங்கள். எந்தக் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்து இருக்கிறார்கள்? எவ்வளவு சம்பளம்? என்பதை தெளிவாகக் கேளுங்கள். முடிந்தால் பிளேஷ்மென்ட் ஆன
மாணவர்களின் செல்போன் எண்களை கேட்டுவாங்கி அவர்களிடமும் 
விசாரியுங்கள். குறைந்தது 20 ஆயிரம் சம்பளம், படிப்புக்கு ஏற்ற வேலையாக 
இருக்க வேண்டும். அதுமட்டும் அல்ல.. கல்லூரியில் லேப் வசதி, முன் அனுபவம் மிக்க பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் முக்கியம்.
ஒவ்வொரு துறையின் தலைவரும் பி.ஹெச்.டி முடித்தவராக இருக்க வேண்டும். இதை எல்லாம் விசாரித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அந்தக் 
கல்லூரியில் சேர்ப்பது பற்றி முடிவுக்கு வாருங்கள்' என்று அறிவுரை சொல்லி 
அனுப்பினார். நிஜம் இதுதான்..


அடுத்த குளறுபடி கல்லூரியின் பெயரில் ஆரம்பிக்கிறது. ஒரே பெயரில் இயங்கும் கல்லூரிகள் ஏராளம் இருக்கின்றன. உதாரணத்துக்கு கந்தசாமி 
இஞ்சினியரிங் காலேஜ் புகழ்பெற்ற கல்லூரி என்றால், ஸ்ரீகந்தசாமி,
எஸ்.கந்தசாமி என்று பத்துக் கல்லூரிகள் இருக்கின்றன. கவுன்சிலிங் செல்லும் 
மாணவர்கள், கந்தசாமியை மட்டும் மனதில் நினைத்து செல்வார்கள். அவர்கள் நினைக்கும் கந்தசாமிக்கு உரிய வரிசை என் தெரியாமல், தடுமாற்றத்தில் ஏதோ ஒரு கந்தசாமியை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும். கவுன்சிலிங் செல்வதற்கு முன்பே எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க நினைக்கிறீர்களோ அந்தக் கல்லூரியைப் பற்றிய முழுமையானத் தகவல்களை இன்டநெட்டில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். சில கல்லூரிகள், நெட்டில் நல்ல படங்களையும் தவறான தகவல்களையும் வெளியிட்டு ஏமாற்றுவார்கள். முடிந்தவரை ஒரு முறை அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும். கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பற்றியும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் இருக்கும். ஆனால், ஹாஸ்டல் பீஸ், ஸ்டேசனரி பீஸ் என்று விதவிதமாக மறைமுகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

கவுன்சிலிங்கில் உங்களுக்கான வரிசையில் நீங்கள் காத்திருக்கும்போது ,
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் கல்லூரியில், நீங்கள் சேர நினைக்கும் கோர்ஸில் 
15 காலி இடங்கள் இருப்பதாகக் காட்டும். உங்களுக்கு முன் பத்து பேர்தான் 
இருப்பார்கள். நிச்சயம் நமக்கு இடம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் 
காத்திருப்பீர்கள். உங்கள் முறை வரும்போது அந்தக் கல்லூரியில் இடம் இல்லை என்று காட்டும். இப்படி சீட்கள் தீடிரென மாயமாகும் மர்மம் என்ன?

பிரபலமான சில கல்லூரிகளில், கவுன்சிலிங்கில் சீட் முடிந்துவிட்டதாக கணக்கு காட்டிவிட்டு, பத்து சீட்கள் வரை நிரப்பாமல் வைத்திருப்பார்கள்.
மெடிக்கல் சீட்டுக்கு முயற்சி செய்து அங்கே இடம் கிடைக்காதவர்கள் மீண்டும் இந்தக் கல்லூரிகளைத்தான் தேடி வருவார்கள். அப்படி வரும்போது, இந்தப் 
பிரபலக் கல்லூரிகளில் இடம் இல்லை என்று டிமாண்ட் செய்வார்கள். 'ஒரே ஒரு சீட் மட்டும்தான் இருக்கு. 25 லட்சம் ஆகும்' என்று கறாராகப் பேசுவார்கள்.
வேறுவழி இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் மாணவர்களைக் குறிவைத்தே 
சில பிரபல கல்லூரிகள் காத்திருகின்றன.

இது கடந்த ஆண்டு சம்பவம். மத்திய மாவட்டத்தில் இந்தக் கல்லூரிக்குத் தனி 
மரியாதை உண்டு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் படையெடுப்பர்.
கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன மகனுக்கு எப்படியாவது மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என்று காத்திருந்தார். அதனால், அரசுக் கல்லூரியில் சர்வ சாதாரணமாகக் கிடைத்த பொறியியல் கல்லூரி வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்தார். மெடிக்கல் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் பொறியியல் கல்லூரி பக்கம் வந்தார். பொறியியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் முடிந்திருந்தது. அவருக்கு நெருக்கமான டாக்டர் நண்பர் மூலமாக அந்தக் கல்லூரி நிர்வாகத்தை அணுகினார். வாய்ப்பே இல்லை, அட்மிஷன் முடிந்துவிட்டது' என்று பதில் வந்தது. அடுத்த சில 
நாட்களில் டாக்டரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு. சார்.. நீங்க தேடிவந்த காலேஜ் எனக்குத் தெரியும். அந்தக் காலேஜ்ல இன்னும் இரண்டு சீட் இருக்கு. பணம் கொஞ்சம் அதிகமா எதிர்பாக்கிறாங்க. நீங்க கூட்டிட்டு வந்த டாக்டர்,
மேனேஜ்மேன்ட்டுக்கு தெரிஞ்சவர். அதனால பணம் குறைச்சலா கொடுப்பாருன்னு அப்படி சொல்லிட்டாங்க. நீங்க அவருக்குத் தெரியாம வாங்க பேசி முடிச்சுக்கலாம். 

நான் எஜுகேசன் கன்சல்டன்ஸி ஏஜென்சி நடத்துறேன். நீங்க வந்துட்டுப் போன தகவல் அந்தக் காலேஜ்ல இருக்கும் எங்க சோர்ஸ் மூலமா எனக்கு கிடைச்சது' என்று பேசினார் ஒரு நபர். டாக்டரும் சம்பந்தப்பட்ட ஏஜென்சி நபரை நேரில் சந்திக்க 25 லட்சம் ஆகும் சார். ஓகேன்னா பேசலாம். எங்களுக்குத் தனியா 50 ஆயிரம் கொடுத்திடனும்' என்று கேட்க, டாக்டரும் சம்மதித்திருக்கிறார். மறுநாள் பணத்துடன் வந்த டாக்டரை ஏஜென்சி நபர், ஒரு வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அந்த வீட்டில் இருந்த நபர்தான் கல்லூரியின் செகரெட்டரி. பணத்தைக் கொடுத்ததும், காலண்டரில் ஒரு தேதியைக் கிழித்து, அதன் பின்பக்கத்தில் கிறுக்கிக் கொடுத்து அட்மிசன் போட்டுக்கங்க என்று சொல்லி அனுப்பினாராம் அவர். நாற்பத்தைந்து ஆயிரம் ரூபாயில் முடிந்திருக்க வேண்டிய அட்மிஷனுக்கு 25 லட்சம்.

விதவிதமான ஸ்டைல்களில் கொள்ளையடிக்கும் கல்லூரிகள் ஒருபக்கம் 
இருக்க, அரசு நிர்ணயித்துள்ள கட்டனத்தைவிடக் குறைவாக வசூலிக்கும் 
கல்லூரிகளும் இருக்கின்றன தெரியுமா..?