Wednesday, July 10, 2013

கரன்சி கல்லூரிகளின் தில்லு முல்லு..

மக்களின் பொதுநலன் கருதி..
ஜூனியர் விகடன் வார இதழில் 07.07.2013 அன்று..

மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி கேப்டன் "தோனி" பிறந்த தினமன்று வெளியான சூப்பர் ஸ்பெஷல் கட்டுரை..  

சில தினங்களுக்கு முன், கல்வி ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது.. 1014 மதிப்பெண்கள் வாங்கிய தங்கள் மகனுடன் அவரைச் சந்திக்க வந்திருந்த்தனர் கரூரைச் சேர்ந்த பெற்றோர். திண்டுக்கல் பக்கத்துல ஒரு காலேஜ்ல நூறு சதவிகிதம் பிளேஷ்மன்ட் என்று விளம்பரம் வந்திருக்கிறது. அந்தக் காலேஜ்ல எங்க பையனை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்க்கலாமா சார்..? படிச்சு முடிச்சதும் வேலையோட வெளியில வருவான் இல்லையா..? என்று கேட்டனர், அந்தப் பெற்றோர். அதற்கு கல்வி ஆலோசகர்.. நூறு சதவிகித பிளேஷ்மன்ட் என்பது ஏமாற்று வேலை. அது சாத்தியமே இல்லை. பைனல் இயரில் 250 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அதில்.. அரியர் இல்லாமல் இருப்பவர்கள் இருநூறு பேர் இருப்பார்கள். அந்த இருநூறு பேரில் மேற்படிப்பு தொடர இருப்பவர்கள் எழுபத்தைந்து பேர்தான் இருப்பார்கள். மீதி இருக்கும் 125 பேருக்கு வேலை வாங்கித் தருவார்கள். அதுவும் அவர்கள் படித்த படிப்புக்கான வேலையாக இருக்காது. சாதாரண (பி.பீ.ஓ) BPO கம்பெனிகளிலோ, மார்கெட்டிங் வேலையோ ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வாங்கித் தருகிறார்கள். கல்லூரிகளுக்கு இதுபோன்ற வேலைகளை வாங்கித் தரும் ஏஜென்சிகள் ஏராளமாக உள்ளன. அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார்கள்.  

நீங்கள் அந்த கல்லூரிக்குச் செல்லுங்கள். கடந்த ஆண்டு எத்தனை பேருக்கு 
பிளேஷ்மன்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பதை விசாரியுங்கள். எந்தக் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்து இருக்கிறார்கள்? எவ்வளவு சம்பளம்? என்பதை தெளிவாகக் கேளுங்கள். முடிந்தால் பிளேஷ்மென்ட் ஆன
மாணவர்களின் செல்போன் எண்களை கேட்டுவாங்கி அவர்களிடமும் 
விசாரியுங்கள். குறைந்தது 20 ஆயிரம் சம்பளம், படிப்புக்கு ஏற்ற வேலையாக 
இருக்க வேண்டும். அதுமட்டும் அல்ல.. கல்லூரியில் லேப் வசதி, முன் அனுபவம் மிக்க பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் முக்கியம்.
ஒவ்வொரு துறையின் தலைவரும் பி.ஹெச்.டி முடித்தவராக இருக்க வேண்டும். இதை எல்லாம் விசாரித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அந்தக் 
கல்லூரியில் சேர்ப்பது பற்றி முடிவுக்கு வாருங்கள்' என்று அறிவுரை சொல்லி 
அனுப்பினார். நிஜம் இதுதான்..


அடுத்த குளறுபடி கல்லூரியின் பெயரில் ஆரம்பிக்கிறது. ஒரே பெயரில் இயங்கும் கல்லூரிகள் ஏராளம் இருக்கின்றன. உதாரணத்துக்கு கந்தசாமி 
இஞ்சினியரிங் காலேஜ் புகழ்பெற்ற கல்லூரி என்றால், ஸ்ரீகந்தசாமி,
எஸ்.கந்தசாமி என்று பத்துக் கல்லூரிகள் இருக்கின்றன. கவுன்சிலிங் செல்லும் 
மாணவர்கள், கந்தசாமியை மட்டும் மனதில் நினைத்து செல்வார்கள். அவர்கள் நினைக்கும் கந்தசாமிக்கு உரிய வரிசை என் தெரியாமல், தடுமாற்றத்தில் ஏதோ ஒரு கந்தசாமியை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும். கவுன்சிலிங் செல்வதற்கு முன்பே எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க நினைக்கிறீர்களோ அந்தக் கல்லூரியைப் பற்றிய முழுமையானத் தகவல்களை இன்டநெட்டில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். சில கல்லூரிகள், நெட்டில் நல்ல படங்களையும் தவறான தகவல்களையும் வெளியிட்டு ஏமாற்றுவார்கள். முடிந்தவரை ஒரு முறை அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும். கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பற்றியும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் இருக்கும். ஆனால், ஹாஸ்டல் பீஸ், ஸ்டேசனரி பீஸ் என்று விதவிதமாக மறைமுகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

கவுன்சிலிங்கில் உங்களுக்கான வரிசையில் நீங்கள் காத்திருக்கும்போது ,
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் கல்லூரியில், நீங்கள் சேர நினைக்கும் கோர்ஸில் 
15 காலி இடங்கள் இருப்பதாகக் காட்டும். உங்களுக்கு முன் பத்து பேர்தான் 
இருப்பார்கள். நிச்சயம் நமக்கு இடம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் 
காத்திருப்பீர்கள். உங்கள் முறை வரும்போது அந்தக் கல்லூரியில் இடம் இல்லை என்று காட்டும். இப்படி சீட்கள் தீடிரென மாயமாகும் மர்மம் என்ன?

பிரபலமான சில கல்லூரிகளில், கவுன்சிலிங்கில் சீட் முடிந்துவிட்டதாக கணக்கு காட்டிவிட்டு, பத்து சீட்கள் வரை நிரப்பாமல் வைத்திருப்பார்கள்.
மெடிக்கல் சீட்டுக்கு முயற்சி செய்து அங்கே இடம் கிடைக்காதவர்கள் மீண்டும் இந்தக் கல்லூரிகளைத்தான் தேடி வருவார்கள். அப்படி வரும்போது, இந்தப் 
பிரபலக் கல்லூரிகளில் இடம் இல்லை என்று டிமாண்ட் செய்வார்கள். 'ஒரே ஒரு சீட் மட்டும்தான் இருக்கு. 25 லட்சம் ஆகும்' என்று கறாராகப் பேசுவார்கள்.
வேறுவழி இல்லாமல் கடைசி நேரத்தில் வரும் மாணவர்களைக் குறிவைத்தே 
சில பிரபல கல்லூரிகள் காத்திருகின்றன.

இது கடந்த ஆண்டு சம்பவம். மத்திய மாவட்டத்தில் இந்தக் கல்லூரிக்குத் தனி 
மரியாதை உண்டு. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் படையெடுப்பர்.
கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன மகனுக்கு எப்படியாவது மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என்று காத்திருந்தார். அதனால், அரசுக் கல்லூரியில் சர்வ சாதாரணமாகக் கிடைத்த பொறியியல் கல்லூரி வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்தார். மெடிக்கல் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் பொறியியல் கல்லூரி பக்கம் வந்தார். பொறியியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் முடிந்திருந்தது. அவருக்கு நெருக்கமான டாக்டர் நண்பர் மூலமாக அந்தக் கல்லூரி நிர்வாகத்தை அணுகினார். வாய்ப்பே இல்லை, அட்மிஷன் முடிந்துவிட்டது' என்று பதில் வந்தது. அடுத்த சில 
நாட்களில் டாக்டரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு. சார்.. நீங்க தேடிவந்த காலேஜ் எனக்குத் தெரியும். அந்தக் காலேஜ்ல இன்னும் இரண்டு சீட் இருக்கு. பணம் கொஞ்சம் அதிகமா எதிர்பாக்கிறாங்க. நீங்க கூட்டிட்டு வந்த டாக்டர்,
மேனேஜ்மேன்ட்டுக்கு தெரிஞ்சவர். அதனால பணம் குறைச்சலா கொடுப்பாருன்னு அப்படி சொல்லிட்டாங்க. நீங்க அவருக்குத் தெரியாம வாங்க பேசி முடிச்சுக்கலாம். 

நான் எஜுகேசன் கன்சல்டன்ஸி ஏஜென்சி நடத்துறேன். நீங்க வந்துட்டுப் போன தகவல் அந்தக் காலேஜ்ல இருக்கும் எங்க சோர்ஸ் மூலமா எனக்கு கிடைச்சது' என்று பேசினார் ஒரு நபர். டாக்டரும் சம்பந்தப்பட்ட ஏஜென்சி நபரை நேரில் சந்திக்க 25 லட்சம் ஆகும் சார். ஓகேன்னா பேசலாம். எங்களுக்குத் தனியா 50 ஆயிரம் கொடுத்திடனும்' என்று கேட்க, டாக்டரும் சம்மதித்திருக்கிறார். மறுநாள் பணத்துடன் வந்த டாக்டரை ஏஜென்சி நபர், ஒரு வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அந்த வீட்டில் இருந்த நபர்தான் கல்லூரியின் செகரெட்டரி. பணத்தைக் கொடுத்ததும், காலண்டரில் ஒரு தேதியைக் கிழித்து, அதன் பின்பக்கத்தில் கிறுக்கிக் கொடுத்து அட்மிசன் போட்டுக்கங்க என்று சொல்லி அனுப்பினாராம் அவர். நாற்பத்தைந்து ஆயிரம் ரூபாயில் முடிந்திருக்க வேண்டிய அட்மிஷனுக்கு 25 லட்சம்.

விதவிதமான ஸ்டைல்களில் கொள்ளையடிக்கும் கல்லூரிகள் ஒருபக்கம் 
இருக்க, அரசு நிர்ணயித்துள்ள கட்டனத்தைவிடக் குறைவாக வசூலிக்கும் 
கல்லூரிகளும் இருக்கின்றன தெரியுமா..?

No comments:

Post a Comment