Tuesday, April 22, 2014

மரங்களின் தோழன் (நிழல் அமைப்பு) அமைப்பின் நிறுவனர் ஷோபா மேனனின் மகத்தான சுற்றுச்சூழல் சேவைக்கு வாழ்த்துக்கள்!!

ஊருக்குள் உயிர் பெரும் குறுங்காடுகள்...

பூமி வானை நோக்கி எழுதும் கவிதைகள் மரங்கள் என்கிறது கலீல் கிப்ரானின் கவிதை. அந்தப் பசுங்கவிதைகளை ரசித்துப் பாதுகாக்கும் வேலையைப் பத்து ஆண்டுகளாகச் செய்து வருகிறது (மரங்களின் தோழன்) நிழல் அமைப்பு. 

மரங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சத்தமில்லாமல் சில மாற்றங்களை விதைத்திருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில், மக்கள் பங்கேற்புடன் சமூகப் பூங்காக்களை அமைத்திருப்பதை நிழலின் முக்கியப் பணி என்கிறார் நிழல் அமைப்பின் நிறுவனர் ஷோபா மேனன்.

ஷோபா மேனன் 
நாற்பது ஆண்டுகளுக்கு முன் மரங்களால் பசுமை போர்த்தப்பட்டிருந்த சென்னை, தொடர்ச்சியான நகர்மயமாக்கம் காரணமாக மரங்களை இழந்து, இன்றைக்கு கான்கிரீட் காடாக மாறிவிட்டது. நம் மண்ணின் மரங்களைப் பற்றிய அறிவும் ஆர்வமும் இளைய தலைமுறையிடம் காணாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில்தான் சென்னையில் செயல்படும் நிழல் அமைப்பின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அமைப்பின் சேவையால் மரக்கன்றுகளை நாட்டுப் பராமரிப்பதன் அவசியத்தை, சென்னை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

கோட்டூர் மரப்பூங்கா ...


நிழல் அமைப்பின் முதல் வெற்றிகரமான முயற்சி சென்னை கோட்டூர்புரம் மரப்பூங்கா. 2006 - ல் இந்த இடத்தை நிழல் அமைப்பிடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்தபோது குப்பை மேடாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது இந்தப் பூங்கா சென்னை மாநகரத்தின் நடுவில் 500 மரங்களுடன் ஒரு சின்ன காடு போலிருக்கிறது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை மான்களில் ஆரம்பித்துப் பட்டாம்பூச்சிகள் வரை பல உயிரினங்களுக்குப் பிடித்திருக்கிறது. "பிரேம்னா, பட்டாம்பூச்சிகளுக்கு பிடித்த மரம். அந்த மரங்களை நட்டிருப்பதால், இங்கே பட்டாம்பூச்சிகளை அதிகமாகப் பார்க்க முடியும்" என்கிறார் ஷோபா மேனன்...

உலகப் புவி நாள்  - ஏப்ரல் 22


தூக்கணாங்குருவி கூடுகட்டும் கருவேல மரம், பறவைகளுக்குப் பிடித்த நெய்கொட்டான் மரம் என்று பல்லுயிர்களும் விரும்பும் இடமாக இருக்கிறது, கோட்டூர்புரம் மரப்பூங்கா. இப்படிச் சமூகப் பங்கேற்பை ஒரு செயல்பாட்டில் உறுதிப்படுத்துவதின் மூலம் குப்பை மேட்டைக்கூடக் குளிர்நிழல் பூங்காவாக்க முடியும் என்று காட்டியிருக்கிறது நிழல்...

கோட்டூர்புரம் மரப்பூங்காவை மாதிரியாகக் கொண்டு சென்னையில் மக்களுடன் இணைந்து பல இடங்களில் புதிய சமூகப் பூங்காக்களை நிழல் அமைப்பு அமைத்திருக்கிறது. வேளச்சேரி, சிட்லப்பாக்கம், மாதாவரம், நீலாங்கரை, அசோ நகர் போன்ற பகுதிகளில் சமூகப் பூங்காக்களை அமைத்திருக்கிறோம். பூங்காக்களில் மக்களே மரங்களைப் பராமரிப்பதாலும் சென்னை மாநகராட்சியின் ஆதரவாலும் நகர்ப்புறப் பல்லுயிரயத்தை உருவாக்க முடிந்திருக்கிறது என்கிற போது, இவருடைய மகத்தான சேவையைப் பார்த்து சிலிர்ப்பு ஏற்படுகிறது.

நாம் அனைவரும் மரம் வளர்ப்போம்..! மழை வளம் பெறுவோம்..!!


ஷோபா மேனன் அவர்களே..!! சுற்றுச்சூழலுக்கு சேவை புரிந்ததற்காக மத்திய அரசின் விருதுகளை வாங்கிகொண்டு, இந்தியாவிலேயே நான் ஒருவன் மட்டும்தான் பசுமைப் போராளி, சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக நான்
ஒருவன் மட்டும்தான் குரல் கொடுக்கிறேன். மற்றவர்களெல்லாம் சுய விளம்பரங்களைத் தேடிக்கொள்வதற்காக சேவை செய்வதுபோல் நடிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டுத் திரியாமல், மகத்தான சேவை புரியும் ஷோபா மேனன் அவர்களுக்கு, ஆப்பிரிக்காவின் வங்காரி மார்த்தாவைப் போன்று அமைதிக்கான நோபல் பரிசு உங்களைத் தேடிவரும். அந்த நோபல் பரிசு உங்களுக்குக் கிடைப்பதின் மூலம் நோபல் பரிசு தனக்கான தகுதியை பெற்றுக்கொள்ளும். இந்த 21 ம் நூற்றாண்டில் உங்களுடைய சேவை மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..!!

Friday, April 18, 2014

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள்

கணிப்பொறித்துறையின் சில்வர் ஜுபிலி (1988-2013) விழா மலரில் எனது கட்டுரையை தேர்வு செய்து முதல் பக்கத்தில் வெளியிட்ட, எனது இதயத்தில் என்றும் வாழும் அருமைப் பேராசிரியர் Dr.K.அருணேஷ் அவர்களுக்கு, இந்த வலைப்பூவின் மூலம் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையை வலைப்பூவின் வாசகர்களுக்கு இங்கே பிரசுரம் செய்கிறேன்...

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள்...

21 ம் நூற்றாண்டில் தகவல் தொழில் நுட்ப யுகம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியது. உலகெங்கிலும் உள்ள கோடான கோடி மக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய ஊடகமாக செயல்படுகிறது. முகநூல், டுவிட்டர், வலைப்பூ, யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள், இணையதளங்களின் மூலம் ஏராளமான பங்களிப்பை செய்கின்றன. பத்துவருடங்களுக்கு முன்பு இணையதள பயன்பாடு என்பது இப்போது -ள்ளதைப் போன்று அதிகமாகக் கிடையாது. நவீன வசதிகளைக் கொண்ட அலைபேசியில் இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு சமூக வலைதளங்கள் பிரபலமடையத் தொடங்கின. இதன் மூலம் முகம் தெரியாத நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் பட்சத்தில் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மின்னஞ்சல் மூலம் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. புகைப்படங்கள், வீடியோ காணொளிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம், உலகெங்கிலும் உள்ள அவரவர் நண்பர்களும், மற்றவர்களும் பார்ப்பதற்கு எளிதாக அமைகிறது.

தொழில்நுட்பங்கள் பெருகப் பெருக சாதகமான விசயங்களும், பாதகமான விசயங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சமூக வலைதளங்களை நன்கு சாதகமான முறையில் பயன்படும் வகையில் உபயோகிப்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது. முன்பெல்லாம் நம்முடைய எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வலிமையான ஊடகங்கள் கிடையாது. இன்றைக்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய பார்வையில் சமூகம் குறித்தும், தேசம் குறித்தும், அரசியல் பற்றியும் ஏராளமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இன்றைய தேசத்தின் பிரச்சினைகள், சமூகத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளின் சாராம்சம் பற்றிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் ஏராளமாகப் பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் தேசத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய விசயங்களும் நடைபெறத்தான் செய்கிறது.

கடந்த 2012 ம் வருடத்தில் எகிப்து நாட்டில் முகநூலின் மூலம் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாற்றம் செய்து, தேசத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் உள்ள இலட்சக்கணக்கான இளைஞர்கள் வலைப்பூவின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள இடங்களின் கலாச்சாரத்தை பதிவு செய்து, உலகமறியச் செய்கிறார்கள். தங்கள் வாழ்வில் நடந்த இனிமையான, துன்பமான நிகழ்வுகளை வெளிப்படுத்துவதின் மூலம் அன்றைய சமூக நிலைமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. எந்த அளவிற்கு அற்புதமான விஷயங்களை சமூகவலை தளங்களில் பரிமாறிக்கொள்ளமுடியுமோ, அந்த அளவிற்கு மனதைப் பாழாக்கக்கூடிய விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். இவற்றையெல்லாம் கடந்து அடுத்த 25 வருடங்களில் உலகத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக சமூக வலைதளங்களின் பங்களிப்பு இருக்கும்.