Friday, April 18, 2014

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள்

கணிப்பொறித்துறையின் சில்வர் ஜுபிலி (1988-2013) விழா மலரில் எனது கட்டுரையை தேர்வு செய்து முதல் பக்கத்தில் வெளியிட்ட, எனது இதயத்தில் என்றும் வாழும் அருமைப் பேராசிரியர் Dr.K.அருணேஷ் அவர்களுக்கு, இந்த வலைப்பூவின் மூலம் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையை வலைப்பூவின் வாசகர்களுக்கு இங்கே பிரசுரம் செய்கிறேன்...

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள்...

21 ம் நூற்றாண்டில் தகவல் தொழில் நுட்ப யுகம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியது. உலகெங்கிலும் உள்ள கோடான கோடி மக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய ஊடகமாக செயல்படுகிறது. முகநூல், டுவிட்டர், வலைப்பூ, யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள், இணையதளங்களின் மூலம் ஏராளமான பங்களிப்பை செய்கின்றன. பத்துவருடங்களுக்கு முன்பு இணையதள பயன்பாடு என்பது இப்போது -ள்ளதைப் போன்று அதிகமாகக் கிடையாது. நவீன வசதிகளைக் கொண்ட அலைபேசியில் இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு சமூக வலைதளங்கள் பிரபலமடையத் தொடங்கின. இதன் மூலம் முகம் தெரியாத நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் பட்சத்தில் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மின்னஞ்சல் மூலம் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. புகைப்படங்கள், வீடியோ காணொளிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம், உலகெங்கிலும் உள்ள அவரவர் நண்பர்களும், மற்றவர்களும் பார்ப்பதற்கு எளிதாக அமைகிறது.

தொழில்நுட்பங்கள் பெருகப் பெருக சாதகமான விசயங்களும், பாதகமான விசயங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சமூக வலைதளங்களை நன்கு சாதகமான முறையில் பயன்படும் வகையில் உபயோகிப்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது. முன்பெல்லாம் நம்முடைய எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வலிமையான ஊடகங்கள் கிடையாது. இன்றைக்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய பார்வையில் சமூகம் குறித்தும், தேசம் குறித்தும், அரசியல் பற்றியும் ஏராளமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இன்றைய தேசத்தின் பிரச்சினைகள், சமூகத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளின் சாராம்சம் பற்றிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் ஏராளமாகப் பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் தேசத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய விசயங்களும் நடைபெறத்தான் செய்கிறது.

கடந்த 2012 ம் வருடத்தில் எகிப்து நாட்டில் முகநூலின் மூலம் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாற்றம் செய்து, தேசத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் உள்ள இலட்சக்கணக்கான இளைஞர்கள் வலைப்பூவின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள இடங்களின் கலாச்சாரத்தை பதிவு செய்து, உலகமறியச் செய்கிறார்கள். தங்கள் வாழ்வில் நடந்த இனிமையான, துன்பமான நிகழ்வுகளை வெளிப்படுத்துவதின் மூலம் அன்றைய சமூக நிலைமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. எந்த அளவிற்கு அற்புதமான விஷயங்களை சமூகவலை தளங்களில் பரிமாறிக்கொள்ளமுடியுமோ, அந்த அளவிற்கு மனதைப் பாழாக்கக்கூடிய விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். இவற்றையெல்லாம் கடந்து அடுத்த 25 வருடங்களில் உலகத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக சமூக வலைதளங்களின் பங்களிப்பு இருக்கும்.

No comments:

Post a Comment