Thursday, October 22, 2015

தி சாஷான்க் ரிடம்ப்ஷன்


தி சாஷான்க் ரிடம்ப்ஷன் படத்தை 2002 ம் வருடம் ஸ்டார் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். அப்போது பார்க்கும்போது படம் நன்றாக இருப்பதாக மனதில் தோன்றியது. மொழி அவ்வளவாக புரியவில்லை. சமீபத்தில் IMDB இணையதளத்தில் சிறந்த 250 படங்களின் வரிசையில் முதலாவது இடத்தில் இருந்தது. தற்செயலாக வீடியோ டிவிடி கடையில் பார்த்தபோது இந்தப் படத்தின் தமிழ் மொழி குறுந்தகடு கிடைத்தது. 

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், உரையாடலும்தான்...

'ஆண்டி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள டிம் ராப்பின்ஷும், மார்கன் பிரிமேனும் அற்புதமான நடிப்பை செய்துள்ளது மனதை கவர்ந்தது. ஆண்டி தனது மனைவி வேறொருவனுடன் தகாத உறவு கொள்ளும்போது, கொலை செய்யும் நோக்கத்துடன் காரில் அமர்ந்திருக்கும்போது வேறொருவன் கொலை செய்கிறான். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெறுகிறான். கொடும் சித்தரவதை நிகழும் இடமாக ஷாஷாங் சிறைச்சாலையில் அடைபடுகிறான். சிறைச்சாலை அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு மார்கன் பிரீமேன் இவனுக்கு முன்பே சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார். இருவருக்குள்ளும் சிநேகிதம் உருவாகிறது. கொஞ்சம்கூட கவலைகொள்ளாத ஆண்டியின் நடவடிக்கைகள் மார்கனை கவருகிறது. ஒரு மாலை நேர சந்திப்பில் ஆண்டி மார்கனிடம் சிறிதான சுத்தியல் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறான். மார்கன் அதற்கு செலவாகுமே என்று சொல்லும்போது அதற்கான பணத்தையும் கொடுக்கிறான். சுத்தியல் சிறைச்சாலைக்கே உரிய ரகசியமான முறையில் பணியாளர் ஒருவர் மூலம் ஆண்டிக்கு கிடைக்கிறது. அதன்பிறகான படத்தின் திரைக்கதை இதயத்தையே உலுக்குகிறது. 

ஒவ்வொரு நாளும் தன்னுடைய சிறைச்சாலையின் சுவரை சுத்தியலால் தட்டித் தட்டி தன்னுடைய வேலையை ஆரம்பிக்கிறான். அதன்பிறகு சிறைச்சாலையில் பல மாறுதல்களை செய்கிறான். சிறைச்சாலை நூலகத்தில் பல புதிய புத்தகங்களை வரவழைக்கிறான். தன்னுடைய வங்கி அதிகாரி என்ற பணி அனுபவத்தில் சிறை அதிகாரிகளை தன் வசப்படுத்தி, வரி ஏய்ப்பு செய்வதற்கு உதவுகிறான். இதன் மூலம் ஆண்டியின் செல்வாக்கு உயருகிறது. சிறைச்சாலை அதிகாரிகளின் பல அந்தரங்கமான விசயங்கள் இவன் வசமாகிறது. தான் செய்யாத கொலைக்குற்றம் வேறொரு கைதியின் மூலம் இன்னொருவன் செய்தான் என்று தெரியவரும்போது குற்றம் நடந்த நிகழ்வை சொல்பவனை அதிகாரிகள் சுட்டுக் கொள்கிறார்கள். இதனிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புவதற்குண்டான வேலைகளை ஆண்டி கச்சிதமாக செய்துகொண்டே இருக்கிறான். ஒரு பொய்யான மனிதன் என்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதன் மூலம், சிறையிலிருந்து தப்பிச் சென்ற பிறகு ஆதாரங்களுடன் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புதுறையிடம் சிக்க வைக்கிறான். ஆண்டி சிறையிலிருந்து தப்பும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. 'மர்லின் மன்றோ' வால்போஸ்டரை சிறை அறையினுள் ஒட்டி வைத்து அதன் பின்புறம் கச்சிதமாக இருபது வருடங்கள் ஓட்டை போட்டு தப்பிப்பது, சிறையின் பின்புறமுள்ள தண்ணீர்க் குழாயை உடைத்து மூணே முக்கால் கிலோ மீட்டர் தூரம் குழாயினுள்ளே பயணித்து, சிறைச்சாலையை விட்டு வெளியேறியதும் விடுதலை பெற்ற சாகாசத்துடன் மழையில் நனைவது அசாத்தியமான மனிதனின் செயல்பாடாக பிரமிக்க வைக்கிறது. முதாலாளித்துவத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிவதுபோல் உள்ளது. அதன்பிறகு மார்கன் சிறையிலிருந்து விடுதலையானதும் ஆண்டியை தேடிச்சென்று அடையும் காட்சி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மனித வாழ்வின் உன்னதநிலைகளை இந்தப் படத்தில் பார்த்தபோது, இதயமே உறைந்துவிட்டது. இதற்கு முன்பு வில்லியம் வைலரின் "பென்ஹர்" திரைப்படத்தில் தொழு நோயாளிகள் படித்துறையில் மிச்செலா தன்னுடைய அம்மா, சகோதரியை பார்க்கும்போது இதயமே உறைந்துபோகிற அளவிற்கு உணர்ந்திருக்கிறேன். அதுபோன்று இந்தப் படத்தில் மார்கனுடனான ஆண்டியின் உரையாடல் மனதை கட்டிப்போட்டது. இந்தப் படத்தை காலதாமதமாக பார்த்தது வருத்தம்தான். இருப்பினும் இந்த வருடத்தில் பார்த்தது மனநிறைவைத் தந்தது...

Tuesday, September 8, 2015

நாகர்களின் ரகசியம்

எழுத்தாளர் அமிஷின் சிவா முத்தொகுதியின் இரண்டாவது நூலான 'நாகர்களின் ரகசியம்' இனிமையானதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது.

4000 வருடங்களுக்கு முன்பு மனிதனாக வாழ்ந்த ஒரு மனிதர், இன்று கடவுளாக வணங்கப்படுகிறார். அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணித்தினூடே நிகழும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கிறது. பிரகஸ்பதியுடனான நட்பு, சதியுடனான திருமண வாழ்க்கை, சதியின் தந்தையார் செய்யும் மாயவலை சூழ்ச்சிகள் என்று கதை செல்லும் விதமே வியப்பில் ஆழ்த்துகிறது. நாகர்களையும் அவர்களின் அங்ககீனமான தோற்றத்தையும் குறிப்பிட்டு அவர்களின் மீதான வெறுப்பை உண்டாக்கும் பட்சத்தில், கிராமத்தில் புகுந்த புலிகளைக்  கொன்று மக்களை காப்பாற்றச் சென்ற இளவரசி சதியை 'நாகா' உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதன்பிறகான உரையாடலில் 'நாகா' சதியின் கருவில் பிறந்த குழந்தை என்று தெரியவரும்போது, நம்மை ஆச்சரியத்தில் மிதக்கவிடுகிறது. அதன் பிறகு அவிழும் ரகசியத்தின் முடிச்சுகள் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவு செய்கிறது. சிவபெருமானின் புராண வரலாற்றை புதிய கோணத்தில் எழுதி நம்மை ஆச்சரியத்தில் மிதக்க விடுகிறார் எழுத்தாளர் அமிஷ்.

'நாகா' பற்றிய ரகசியத்தை சிவனிடம் சதி சொல்லும் காட்சிகள், நாகா -வினுடைய கரங்களில் ஒருவித சின்னத்தைப் பார்த்தவுடன் அடையும் பதற்றம், அதன் பிறகான சிவனின் கோபம் என்று அடுத்த கட்டமான கதைக்களம் செல்லும். பிரகஸ்பதியின் ரகசியத்தை தேடி கங்கை நதி தீரத்தில் கப்பலில் செல்லும்போது சிவனும் அவனுடைய பரிவாரங்களும் மலைக் காடுகளில் 'பரசுராமருடன்' சண்டையிடும் காட்சிகள் வாசிப்பில் புதியதொரு அனுபவம். 'சோமரச பானம்' புதினத்தில் ஏற்படுத்தும் பிரமிப்பு, சதியின் குழந்தை பிறக்கும்வரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

சிவனின் குழந்தை ஏதைச்சையாக கோயிலுக்குள் விளையாடும்போது, சிங்கங்களின் தாக்குதலிருந்து 'நாகா' தன்னுடைய உயிரைப் பணையம் வைத்து மீட்கும் காட்சி அற்புதம். அதன்பிறகு நாகாவின் மீது சிவனின் பரிவு கதையின் நெருடல். உணர்ச்சிமயமான எண்ணங்களை வெளிப்படுத்திய வண்ணம் சிவன் இருப்பார்.

புதினத்தில் மனுதர்மத்தை உருவாக்கிய 'மனு' தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த நிகழ்வு யுகத்தின் பயணம். சிவபக்தனாகிய எனக்கு 'மெலுஹாவின் அமரர்கள்', 'நாகர்களின் ரகசியம்' புதியதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது தொகுதியான 'வாயுபுத்ரா'வின் தமிழ் பதிப்பு இந்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது!

குமணன்

கொங்கு மண்டலத்தின் முதிரம் என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் குமணன். (இன்றைய பழனி மலை வட்டம் அருகே உள்ள குதிரை மலை). இல்லை என்று வருவோர்க்கு எல்லாமும் கொடுத்த வள்ளல்.

அண்ணன், தான தருமம் செய்து நற்பெயர் வாங்கியது குமணனின் தம்பி
இளங்ககுமணனுக்குப் பிடிக்கவில்லை. பொறாமை நெஞ்சில் தீயாகத் தகிக்க, அண்ணணனைக் காட்டிற்கு விரட்டி விட்டு நாட்டைப் பிடுத்துக் கொண்டான். காட்டில் குமணன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். புலவர்கள் எல்லாரும்
ஈதல் யாருமின்றி மிகவும் வறுமையில் வாடினர்.

பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் வறுமையைத் தாங்க முடியமால் காட்டில் குமணனைத் தேடி அலைந்தார்.

குமணனும் துன்பத்தில்தானே காட்டில் திரிகிறான். அவனால் புலவருக்கு என்ன தரமுடியும்? இருந்தாலும் தன்னைப் பாடிய புலவரை வெறுங்கையுடன் அனுப்ப மனமின்றித் தனது வாளைக் கொடுத்து, தனது தலையைக் கொய்து கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் பரிசு தருவான், வாங்கி பசியாறுங்கள் என்கிறான் குமணன்.

ஆனால் புலவர் குமணனின் வாளை மட்டும் வாங்கிக்கொண்டு இளங்குமணனிடம் 
கொண்டு போய்க் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் இரு குமணன்களும் என்னவானார்கள் என்று தெரியவில்லை.

நாடகம் ஒன்றில் மட்டும்,

குமணனிடம் வாளை வாங்கிய புலவர், வாழை மரத்தின் அடிவேரில் தலைபோல் செய்துகொண்டு போய்க் காட்டியதாகவும், அது கண்டு இளங்குமணன் துணுக்குற்று மனம் திருந்தி அழுததாகவும் பிறகு புலவர் உண்மையை உரைக்கக் காட்டில் திரிந்த குமணனை மீண்டும் அழைத்து வந்து நாட்டுக்கு அரசனாக்கினான் என்றும் கூறுகிறது.

ஆதன் ஓரி

நெடுமான் அஞ்சியின் நண்பனாக விளங்கியவன் ஆதன் ஓரி. இவனும் கடையேழு வள்ளல்களில் ஒருவன். ஓரி என்னும் குதிரை மீது பயணம் போனதால் ஓரி என்றே அழைக்கப்பட்டான். யானைகளைப் புலவர்களுக்குப் பரிசாக வழங்கியவன். புலவர்கள் அந்த யானைகளை விற்றுப் பொருள் பெற்றார்கள். வேட்டையாடக் காட்டு வழியே சென்றபோது பாட்டுப் பாடிப் பரிசில் பெரும் பாணர் ஒருவர் காட்டில் இவனைப் பார்த்ததும் யாழ் எடுத்து இசைக்க,அதை கேட்ட ஓரி தன் மேனியில் அணிந்திருந்த அணிகலன்களை அப்பாணருக்கு கொடுத்தான்.

சேரனுடன் கூட்டு சேர்ந்து அதியமானைக் கொன்ற திருமுடிக்காரி, ஆதன் ஓரியை முதலில் கொன்று விட்டுத்தான் அதியமானிடம் சண்டைக்குப் போனான். புலவர்களுக்குப் பொன், பொருள், தேர், யானைகளைப் பரிசாகக் கொடுத்தவன். 
காரி மீது அன்பு கொண்ட கபிலர் என்னும் புலவர் ஒரியைப் பழித்துத் தூற்றினார்.

ஆய் அண்டிரன்

வேள் ஆய், பொதிகை மலைத் தலைவன். இம்மலையை அடுத்த ஆய்குடி இவனது தலைமை ஊர்.

ஆய் நாடு யானைக் கூட்டங்கள் நிரம்பிய நாடு. பரிசு வேண்டி வந்தோர்க்கு யானைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன். ஒரு முறை காட்டிற்குச் சென்றபோது நீலநாகம் ஒன்று ஒரு ஆடையினை விட்டுச் சென்றதாகவும், அதனை ஆய் எடுத்து வந்து தான் வழிபடும் சிவபெருமானுக்குச் சாத்தியதாகவும் கூறுகின்றனர்.

ஆய் அண்டிரன் தன்னைப் பகைத்த கொங்கரை எதிர்த்துப் போரிட்டான். தோல்வியுற்ற கொங்கர், வேல் முனையை மாற்றி எறிந்து விட்டு போர்களத்தை
விட்டு ஓட்டம் பிடித்தனர்.

தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும் புலவர்களுக்கும், இரவலர்களுக்கும் 
ஆய் கொடுத்துவிட்டதால் அவனிடம் வறுமை குடி கொண்டது. நாடும் அழகு குன்றியது.கொடுக்க ஒன்றுமில்லையே என்று எண்ணிய ஆய் மனம் வருந்த உடல் பாதித்து... ஒரு நாள் இறந்தே போனான்.

பேகன்

பொதினியைத் (பழனி) தலைநகராகக் கொண்டு ஆண்டான் பேகன் என்ற மன்னன். காட்டு வழிப்பாதையில் மழைக் காலத்தில் ஒருநாள் பயணம் செய்தான் பேகன். மயில் ஒன்று மேகத்தைக் கண்டு களிப்புற்று நடனமாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பேகன் மயில் குளிருக்கு நடுங்குவதாக எண்ணி தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த பட்டாடையை அம்மயிலுக்குப் போர்த்தி விட்டு அரண்மனைக்கு மகிழ்வுடன் நடந்தான்.

அக்கால மன்னர்கள் கொடைப்பண்பு மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்த கதை ஒரு சரித்திர சான்று.

அதியமான் நெடுமான் அஞ்சி

சேர அரசர்களுக்கு முன் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சிற்றரசர்களில் அதியமான் அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நாம், பாடங்களில் 
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம். அதியமான் என்பது பரம்பரைப் பெயர். அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன். நெடுமான் அஞ்சியின் தந்தை அதியமான் நெடுமிடல் அஞ்சி. பொகுட்டெழினி, நெடுமான் அஞ்சியின் மனைவி நாகையார் சிறந்த புலவர்.


நெடுமான் அஞ்சி தகடூரை(தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நெடுமான் தந்தை நெடுமிடல்மீது சேரன் நார்முடிசேரல் போர் தொடுத்தான். அவனைக் கொல்லி மலையில் எதிர்த்துப் போர் புரிந்த நெடுமிடல் போரில் தோற்றுப்போய் தனது நண்பனான பாண்டிய அரசன் பசும்பூண் பாண்டியனிடம் போய் படைத்தலைவனாகச் சேர்ந்து விட்டான்.

துளு நாட்டு மன்னன் நன்னன் மீது பசும்பூண் பாண்டியன் போர் தொடுக்க, அவனது சேனைக்குத் தளபதியாகச் சென்றான் நெடுமிடல். வாகைப் பரந்தலை என்னும் இடத்தில் நன்னனின் படைத்தலைவன் மிஞிலியால் நெடுமிடல் கொல்லப்பட்டான்.

அதன் பிறகு அவனது மகன் அதியமான் நெடுமான் அஞ்சி தகடூருக்குத் தலைவனான். நெடுமான் அஞ்சி அரசனாக இருந்தபொழுது ஒரு முறை 
வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான். அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான்.

அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும், உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான் அக்கனியைத் தான் உண்ணாது, தன் அமைச்சரவையில் அவைப்புலவராக இருந்த ஔவைக்கு,அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான். ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி.

அவ்வையார் அக்கனியை உண்ட பிறகே அதன் பயன் பற்றிக் கூறினான். மன்னனின் சுயநலமற்ற பண்பை எண்ணிய ஔவை அரசனை மேலும் புகழ்ந்து பாடல் எழுதினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நெடுமான் அஞ்சி மீது போர் தொடுக்கத் திட்டமிட்டான் தொண்டைமான் இளந்திரையன். அஞ்சிக்கோ அப்போது போர் புரியும் எண்ணம் சிறிதும் இல்லை.

அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட ஔவை இளந்திரையனிடம் தூது போனார்.

அதியமானின் மீது பொறாமை கொண்ட இன்னொரு அரசன் பெயர் திருமுடிக் காரி. காரியை நெடுமான் அஞ்சி போரில் தோற்கடித்து விடுகிறான். இதனால் வஞ்சம் தீர்க்க சேரமன்னன் பெருஞ்ச்சேரல் இரும்பொறையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதியமானை எதிர்க்கிறான் காரி. அதியமான் மார்பில் அம்பு பட்டு காயம் காரணமாய் இறந்து விட்டான்.

சேரன் வென்ற அந்த இடம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை.

தன் தந்தைக்கு உதவியாகக் குதிரை மலைப் பகுதியை ஆட்சி செய்து வந்த பொகுட்டெழினி, தந்தையைப் பகை சூழ்ந்திருப்பதை அறிந்து படையுடன் வந்து போரில் வீரமரணம் அடைந்து விட்டான்.

நாட்டுக்காக உயிர் நீத்தனர் நம் முன்னோர். வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த அதியமானின் வாழ்க்கை வஞ்சகர்களால் முடிந்தது.

Saturday, August 8, 2015

மெலுஹாவின் அமரர்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையிலுள்ள விஜயா பதிப்பகத்திற்கு புத்தகம் வாங்கச் சென்றபோது எதேச்சையாக அறிமுக  எழுத்தாளர் அமீஷ் எழுதிய  'மெலுகாவின் அமரர்கள்' புத்தகத்தை பார்த்தேன். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை படைத்திருப்பதாக நூலில் விளம்பரம் இருந்தது. எழுத்தாளர் சசிதாரூர் அவர்களும், மனதை கட்டிப் போடும் எழுத்து நடை என்று பாராட்டு தெரிவித்திருந்தார். சிவபெருமான் குறித்து அற்புதமான நாவல் என்று ஆங்கில இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். ஆங்கிலத்தில் மாபெரும் வெற்றிபெற்று தற்போது தமிழிலும் மொழிபெயர்ப்பாகி விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்று சில நண்பர்கள் சொன்னார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கிப் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் அமீஷின் எழுத்துநடை மனதை கொள்ளை கொண்டது. சிவபெருமான் குறித்த புராணக் கதைகளை பல வருடங்கள் ஆழ்ந்து படித்துள்ளார். இப்படியொரு மனிதன் (சிவன்) பாரத தேசத்தில் வாழ்ந்திருக்கிறாரா என்று எண்ணிப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது!

சிவன் சதி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன் நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம். மூன்று பாகங்கள் கொண்ட இந்த படைப்பில் தற்போது இரண்டாவது பாகமான "நாகர்களின் ரகசியம்" படித்துக் கொண்டிருக்கிறேன்..

Wednesday, June 3, 2015

தொழில்நுட்ப யுகத்தில் முகநூலின் பயன்பாடு - 15.05.14

கோவை மாநகரில் அமரர் பாலதண்டாயுதம் அவர்களின் நினைவு நாளையொட்டி மச்சக்காளிபாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் முகநூல் குறித்து ஆற்றிய உரை..! 

Thursday, January 15, 2015

தை திருநாள் வாழ்த்துக்கள்!


தை திருநாள், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என்று ஒவ்வொரு வருடமும் கிராமத்திலுள்ள உழவர்கள் கொண்டாடி மகிழும் நாள்! இந்த வருடம் வேளாண்மை செய்வதற்கு பருவ மழை நன்றாக பெய்ததால், உழவர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. நகரத்திலுள்ளவர்கள் இயன்றவரை அருகிலுள்ள கிராமத்து விவசாயப் பெருமக்களுடன் தை திருநாளை கொண்டாடி மகிழுங்கள். இந்த மகிழ்ச்சியான திருநாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடலாம். சினிமா அரங்கத்திற்குச் சென்று நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த இனிய திருநாளில் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்போம். அனைவருக்கும் 2015 ம் ஆண்டின் தை திருநாள் வாழ்த்துக்கள்..! 

Friday, January 2, 2015

மலைவாழ் பழங்குடிகள் - தோடர் இன மக்கள்

1913 ம் ஆண்டுகளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த 
ஜே.சார்டஸ் மொலோனி அவர்கள், நீலகிரி மலைபிரதேசத்திற்கு சென்ற போது, தோடர் இன மக்களை புகைப்படம் எடுத்துள்ளார். 1925 ம் ஆண்டுகளில் எழுதிய "A Book Of South India" என்ற புத்தகத்தில் தோடர் இன மக்களைப் பற்றிய வாழ்வியல் முறைகளை பதிவு செய்துள்ளார். 1923 ம் ஆண்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுவிட்டார். தன்னுடைய நாட்டிற்கு சென்றபிறகு தென்னிந்தியாவை பற்றிய அற்புதமான நூலை எழுதி வெளியிடுகிறார்.


பிரிட்டீஷ் ஆட்சி கால இந்தியாவில் எண்ணற்ற ஆங்கிலேய அதிகாரிகள் மலை வாழ் பழங்குடி மக்களைப் பற்றிய செய்திகளையும், வரலாறுகளையும் எழுதியுள்ளனர். இவர்களில் மொலோனி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.தோடர், படுகர், இருளர் என்று எண்ணற்ற மக்கள் நீலகிரி மலைத்தொடர்களில் வசிக்கி றார்கள். பழங்குடி மக்களின் வரலாறு நீண்ட நெடிய வருடங்கள் கொண்டது. ஆங்கிலேயர்கள் நீலகிரி மலைத்தொடர்களில் குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகே, பழங்குடி மக்கள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தார்கள்.


உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகமான பல்லுயிரிய வளம் காணப்படுகிறது. கானுயிர்கள், விலங்கினங்கள், அரிய மூலிகை வகைகள், அரிய மரங்கள் என்று எண்ணற்ற பல்லுயிரியம் நிறைந்து காணப்படக் கூடியது. பழங்குடி மக்கள் தேன் எடுத்தல், மான்கள், பன்றிகளை வேட்டை யாடி, தங்களுடைய உணவுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

1920 ம் ஆண்டுகள் வரைக்கும் கல்வியறிவு ஒரு சதவிகிதம்கூட இல்லாமல் இருந்தார்கள். அதன்பிறகு படிப்படியாக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக ளால், பள்ளிக்கூடங்களில் தங்களுடைய குழந்தைகளை படிப்பதற்கு அனுப்பி னார்கள். இன்றைய தினங்களில் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் அளவிற்கு கல்வியறிவு பெற்றவர்களாக ஆகியுள்ளனர்.


டாக்டர்.பிலோ இருதயநாத் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் 35 வருடங்க -ளுக்கும் மேல், பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்தவர். இவர் எழுதிய "கொங்கு மலைவாசிகள்" என்ற புத்தகம் சிறப்புக்குரியது. மேலும் பல நூல்களை எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் அவர்கள், மேற்குதொடர்ச்சி மலைகளின் பல்லுயிரியத்தைப் பற்றி பல வருடங்களாக நாளிதழ்களில் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகளை, 'இன்னும் பிறக்காத தலை முறைக்காக', தாமரை  பூத்த தடாகம் என்று இரண்டு புத்தகங்களில் தொகுத்து உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல்களில் மலை வாழ் மக்களைப் பற்றிய செய்தி களையும் குறிப்பிட்டுள்ளார்.