Tuesday, September 8, 2015

நாகர்களின் ரகசியம்

எழுத்தாளர் அமிஷின் சிவா முத்தொகுதியின் இரண்டாவது நூலான 'நாகர்களின் ரகசியம்' இனிமையானதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது.

4000 வருடங்களுக்கு முன்பு மனிதனாக வாழ்ந்த ஒரு மனிதர், இன்று கடவுளாக வணங்கப்படுகிறார். அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணித்தினூடே நிகழும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கிறது. பிரகஸ்பதியுடனான நட்பு, சதியுடனான திருமண வாழ்க்கை, சதியின் தந்தையார் செய்யும் மாயவலை சூழ்ச்சிகள் என்று கதை செல்லும் விதமே வியப்பில் ஆழ்த்துகிறது. நாகர்களையும் அவர்களின் அங்ககீனமான தோற்றத்தையும் குறிப்பிட்டு அவர்களின் மீதான வெறுப்பை உண்டாக்கும் பட்சத்தில், கிராமத்தில் புகுந்த புலிகளைக்  கொன்று மக்களை காப்பாற்றச் சென்ற இளவரசி சதியை 'நாகா' உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதன்பிறகான உரையாடலில் 'நாகா' சதியின் கருவில் பிறந்த குழந்தை என்று தெரியவரும்போது, நம்மை ஆச்சரியத்தில் மிதக்கவிடுகிறது. அதன் பிறகு அவிழும் ரகசியத்தின் முடிச்சுகள் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவு செய்கிறது. சிவபெருமானின் புராண வரலாற்றை புதிய கோணத்தில் எழுதி நம்மை ஆச்சரியத்தில் மிதக்க விடுகிறார் எழுத்தாளர் அமிஷ்.

'நாகா' பற்றிய ரகசியத்தை சிவனிடம் சதி சொல்லும் காட்சிகள், நாகா -வினுடைய கரங்களில் ஒருவித சின்னத்தைப் பார்த்தவுடன் அடையும் பதற்றம், அதன் பிறகான சிவனின் கோபம் என்று அடுத்த கட்டமான கதைக்களம் செல்லும். பிரகஸ்பதியின் ரகசியத்தை தேடி கங்கை நதி தீரத்தில் கப்பலில் செல்லும்போது சிவனும் அவனுடைய பரிவாரங்களும் மலைக் காடுகளில் 'பரசுராமருடன்' சண்டையிடும் காட்சிகள் வாசிப்பில் புதியதொரு அனுபவம். 'சோமரச பானம்' புதினத்தில் ஏற்படுத்தும் பிரமிப்பு, சதியின் குழந்தை பிறக்கும்வரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

சிவனின் குழந்தை ஏதைச்சையாக கோயிலுக்குள் விளையாடும்போது, சிங்கங்களின் தாக்குதலிருந்து 'நாகா' தன்னுடைய உயிரைப் பணையம் வைத்து மீட்கும் காட்சி அற்புதம். அதன்பிறகு நாகாவின் மீது சிவனின் பரிவு கதையின் நெருடல். உணர்ச்சிமயமான எண்ணங்களை வெளிப்படுத்திய வண்ணம் சிவன் இருப்பார்.

புதினத்தில் மனுதர்மத்தை உருவாக்கிய 'மனு' தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த நிகழ்வு யுகத்தின் பயணம். சிவபக்தனாகிய எனக்கு 'மெலுஹாவின் அமரர்கள்', 'நாகர்களின் ரகசியம்' புதியதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது தொகுதியான 'வாயுபுத்ரா'வின் தமிழ் பதிப்பு இந்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது!

No comments:

Post a Comment