Friday, November 16, 2012

நேற்று கல்விக் கூடங்கள்; இன்று தங்கச் சுரங்கங்கள்...

முன்பெல்லாம் தங்கச் சுரங்கங்கள் என்றால் கோலார் தங்கச் சுரங்கத்தைதான் சொல்வார்கள்.காரணம் கோலார் தங்கச் சுரங்கத்திற்கும் தமிழர்களுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.இன்று கோலார் தங்கச் சுரங்கத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.காரணம்! சுரங்கத்தில் தங்கத்தின் இருப்பு குறைந்ததும், அதை தோண்டியெடுக்க செலவும் அதிகமானதால் 2003 ஆம் ஆண்டுடன் சுரங்கம் மூடப்பட்டது.அங்கிருந்த தமிழர்கள் குசேலர்கள் ஆனார்கள்.

இன்று தங்கச் சுரங்கங்கள் பூமிக்கடியில் இல்லை.பூமிக்கு மேலே பூத்துக் குழுங்குகின்றன.ஆம்! இன்று வணிக ரீதியாக வளமடைந்துள்ள கல்விகூடங்களைத்தான் சொல்கிறேன்.  இன்று, இரு மருத்துவக் கல்லூரிகளில் மிகப் பெரிய அளவில் நன்கொடை வசூல் நடப்பது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.  வெளிச்சத்திற்கு வந்திருக்கும் செய்தி மிகச் சிறியது.இதுபோன்று ஆயிரக்கணக்கான கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் பெற்றோர்களின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது என்பது தமிழகத்தில்  உள்ள  அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும், இதை யாருக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவர துணிவில்லை.அவர்களுக்குப் பழகிப் போனது!

பத்திரிகைச் செய்தி, ஒரு மத்திய இணை அமைச்சரின் கல்வி நிறுவனத்தை குற்றம் சாட்டுகிறது.இன்று எந்த அரசியல்வாதியின் பெயரில் கல்வி நிறுவனங்கள் இல்லாமல் இருக்கிறது?. ஒன்று கல்வி வள்ளல்கள் தங்கள் கல்வித்தொழிலை  பாதுகாத்துக்கொள்ள அரசியலுக்கு வருகிறார்கள் அல்லது அரசியல்வாதிகள் கல்வி வள்ளல்களாக மாறுகிறார்கள்.இதுதான் இன்றைய நடைமுறை.

கல்லூரியில் நன்கொடை வசூலிக்கிறார்களா? என அறிய, பெரிய விசாரணைக்கு ஒன்றும் போகத் தேவையில்லை.இன்று வங்கிகளுக்கு சென்று ஒவ்வொரு மாணவரும் வங்கிகளில் இருந்து பெற்றிருக்கும் கல்விக் கடன்களை பார்த்தாலே போதும்!

ஆனால் விசாரணை இப்படி நடக்காது!யாராவது புகார் கொடுத்தால் தான் விசாரிப்போம் என அடம்பிடிப்பார்கள்.இவ்வளவு பெரிய வசூல் அரசுக்கு தெரியாமலா நடக்கும்?

தனது குழந்தை  எல்.கே.ஜி-இல் சேர பணம் கொடுப்பதிலிருந்து, கல்லூரியில் படித்து முடிப்பது வரையிலும் தனது பெரும் பகுதி உழைப்பை பெற்றோர்கள் இதற்கே செலவு செய்யவேண்டிய கட்டாயம்.

கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கும் போது இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் நிறைய பணம் செலவு செய்கிறார்கள்.இங்கே தான் பல நேரங்களில் முதல் தவறு நடக்கிறது.வருடா வருடம் நடக்கும் மறு ஆய்வுகளெல்லாம் வெறும் கண்துடைப்பு.அதை மறு வசூல் என்று கூட சொல்லலாம்?
கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பொய்யான உறுதிமொழிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாமலே வகுப்புகள், கண்ணாடி வெளிப்புறத்தை தவிர போதிய உபகரணங்கள் இல்லாத ஆய்வகங்கள்,நடிகர் நடிகைகளுக்கு டாக்டர் பட்டங்கள், நூறு சதவிகித வளாக வேலைவாய்ப்பு உறுதிகள், இன்னும் ஏன், பல கல்வி நிறுவனங்கள் கட்டிடப் பொறியாளர்கள் கொடுக்கும் வரைபடங்களை காட்டியே வசூலை துவக்கிவிடுகிறார்கள்.

பொதுவாக பள்ளியில் நன்றாக படிப்பவர்கள் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைத்துப் போவார்கள். அதற்க்கு அடுத்த இடம் தனியார் கல்லூரிகளுக்கு. ஆனால் தனியார் கல்லூரிகள், தங்கள் கல்லூரி  நூறு சதவிகித வளாக வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறுவார்கள். அரசுக் கல்லூரிகளில் வளாக வேலை வாய்ப்பை அவ்வளவாக பார்க்க முடியாது.எப்படி?  
அங்கே பணம் கொடுத்து, இங்கே பணம் கொடுத்து கடைசியில் தொழிற்கூட நிர்வாகிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளாக வேலை வாய்ப்புக்கு என்று கூட்டிவருகிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது முழு ஏமாற்று வேலை.

பொறியியல் கல்லூரியில் சேர மூன்று முதல் ஐந்து இலட்ச ரூபாய் வசூலிக்கிறார்கள் ,மருத்துவக்கல்லூரிகளில் இருபது முதல் நாற்பது இலட்சம் வரை வசூலிக்கிறார்கள்,எம்.பி.ஏ படிப்புக்கு மூன்றரை முதல் எட்டு இலட்சம் வரை வசூலிக்கப்படுகிறது, ஆசிரியர் பயிற்ச்சி மற்றும் பி.எட் படிப்புகளுக்கு ஒன்று முதல் இரண்டு இலட்சங்கள் வரை வசூலிக்கிறார்கள்.  இப்படியே ஒவ்வொரு படிப்பிற்கும் உள்ள மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து பணம் வசூலிக்கப்படுகிறது.  இதெல்லாம் போக விடுதிச் செலவுகள்,மற்றும் இதர செலவுகள் வேறு.இதை விட கொடுமை பல கல்லூரிகளில் தேர்வுக்கட்டணமாக ஒரு தாளுக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள்.எதற்காக? கடவுளுக்கே வெளிச்சம்!

அரசுக் கல்லூரிகளில், மாணவர்களிடம், இது போன்ற வசூல்கள் பெரும்பாலும் நடப்பதில்லை.காரணம், கட்டணம் அரசால் நிர்மாணிக்கப்படுகிறது. ஆனால் அங்கே விரிவுரையாளர் முதல் துணைவேந்தர் பதவி வரை பணம் இல்லாமல் பதவிக்கு வர முடியாது.அரசு மற்றும் அரசு சார் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர் பதவியில் சேர தற்போதைய மார்க்கெட் நிலவரம் பத்து முதல் பதினான்கு இலட்சம் வரை எனக் கூறப்படுகிறது.இதைக் கொடுப்பதற்கே பல பேர் போட்டியிடுவதால் முக்கியமான இடத்தில் பணத்தை கொடுத்தால் மட்டுமே பதவி கிடைப்பது உறுதியாம்.
இதற்க்கு அடுத்ததாக மார்க்கெட் உள்ளது துணைவேந்தர் பதவி தானாம்.இதற்க்கு இடைப்பட்ட இடங்கள் பதவி உயர்வின் மூலமாகவோ அல்லது டாக்டர் பட்டம் கட்டாயம் என்ற காரணம் இருப்பதாலோ போட்டி குறைவாக இருக்குமாம்.அதனால் மார்க்கெட் மதிப்பு சற்றே குறைவாம்!
இது போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை கல்வி நிறுவனங்கள் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக நமக்கு நிறைய கல்வி நிறுவனங்கள் தேவை தான்.காரணம் இன்னும் நமது நாட்டில் 35 சதவிகிதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.முதலாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரையிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.இன்னும் சொல்லப்போனால் தேசிய அறிவுசார் கழகத்தின் மதிப்பீட்டின்படி உயர்கல்வித் துறையில் மாணவர்களின் எண்ணிக்கையை பதினைந்து சதவிகிதம் அதிகரிக்க நமக்கு இன்னும் 1500 பல்கலைக் கழகங்கள் தேவைப்படுமாம்.

கண்டிப்பாக அரசு மட்டும் இந்த வேலையை செய்ய முடியாது.தனியார்களை, அரசு ஊக்குவிக்கக் காரணம், கல்வி கற்கும் வாய்ப்புக்களை பரந்த அளவில் உருவாக்குவதும்,  மாணவர்களுக்கு தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே கல்வி கிடைக்கச் செய்வதற்கும் தான்.இப்போது பல இடங்களில் இருப்பிடத்திற்கு அருகிலேயே கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
இருந்தும் கையுக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையே தொடர்கிறது.காரணம்!தங்களால் தொட முடியாத உயரத்தில் கல்விக் கட்டணங்கள்.இதில் எங்கே தரமான கல்வியை கற்பது?

பள்ளி மாணவர்களுக்கு  தேவையான தரமான கல்வியை  தனியார் கல்வி நிறுவனங்கள் தான் கொடுக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்ததற்கு, பல அரசுப் பள்ளிக்கூடங்கள், அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணம்.பாவம் இந்த வியாதி கிராமத்தானையும் தொற்றிக்கொண்டுவிட்டது.அவர்களும் ஏமாற்றங்களுக்கு பழகிக்கொண்டிருக்கிறார்கள்.

தேவை!கல்வித்துறையில் மாற்றங்கள்.கல்வித்துறையில் உள்ள குறைகள் முழுமையாக களையப்பட வேண்டும். பல அரசு மற்றும் அரசு சார் கல்லூரிகள் இருந்தும், பல்வேறு வகையான படிப்புகள் இருந்தும், தனியார் கல்விக்கூடங்களையும், ஒரு சில படிப்புகளையும் மட்டும் உயர்வாக நினைத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கே தள்ளிவிடுவது அவர்களின் நம்பிக்கையின்மையையே காட்டுகிறது.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தை பற்றிய  நல்ல நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.அதுதான் அவர்களின் நீண்ட கால பயணத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும்.

முன்பு புரோட்டா கடையில் வேலை  பார்த்துக்கொண்டே தனது பள்ளிப் படிப்பை முடித்து, பின்பு பி.ஏ சமூகவியல் படித்த, ஒரு மாணவர் இன்று ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கிறார் என்பதை மறந்துவிட வேண்டாம்!

No comments:

Post a Comment