Saturday, May 17, 2014

இந்தியாவில் பிறந்த இளைஞர் பட்டாளங்களே..!!

இந்திய தேசத்து மண்ணில்
கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இளைஞனே!!
உன்னுடைய வாழ்வின் முன்மாதிரி பில்கேட்ஸா?
உன்னுடைய கனவில் பாரக் ஒபாமா வருகிறாரா?
ஆம் என்றால் நீ இந்தியாவில் பிறந்த இளைஞன்தான்..!!


ஏனெனில் இந்தியக் குடிமகன் மட்டும்தான்
இந்திய தேசத்தை விட்டு வெளியே
செல்ல ஆசைப்படுவான்..!!

உன் அதிகபட்ச கனவு
6000 மைல்கள் தாண்டி உள்ள அமெரிக்கா
உன்னுடைய குறைந்த கனவு
2000 மைல்கள் தாண்டி உள்ள ஐரோப்பா..!!


நீ அமெரிக்கா தூதரகத்திற்கும்
ஐரோப்பிய தூதரகத்திற்கும் நடையாய்
நடந்து உன் செருப்பை மட்டும் அல்ல
அந்த ரோட்டையும் தேய்ப்பாய்..!!

கடைசியில் உனது கனவு நனவாகி
விமானத்தில் 20000 அடி உயரத்தில்
பறந்து உனது தாயை மட்டும் அல்ல..
உனது தாய்நாட்டையும் மறந்து செல்வாய்..!!
இந்தக் கவிதை நான் வரைவது
அமெரிக்கா, ஐரோப்பாவுக்குச் செல்லும்
அனைவரையும் அல்ல..!!
அந்த நாட்டிற்கு சென்றுவிட்டு
தான் பிறந்த பாரத மண்ணையே
மறந்து விடுகிறார்களே..
அந்த தவப்புதல்வர்களுக்காக..!!

பொருளீட்டுவதற்காக தேசங்கள்
கடந்து செல்லலாம்..
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
என்பது ஆயிரங்காலத்து பழமொழி..!!
திரைகடல் ஓடி ஜனனம் செய்த
மண்ணை மறந்து விடு என்பதை
எப்படி ஜீரணிக்க முடியும்..!!
திரவியம் தேடி பிறந்த மண்ணுக்காக
என்ன செய்யப் போகீறார்கள்..!!
இந்திய மண்ணில் மாளிகை கட்டி
இலட்சங்கள் மதிப்புள்ள வாகனங்கள் வாங்கி

சூரியனின் கதிர்கள் மேனியில் படமால்
நாலாதிக்கும் சுற்றுலா சென்று
நாட்களை ஆனந்தமாய்க் கழிப்பார்கள்..!!
வேறென்ன செய்வார்கள்...!
இந்த பரந்துபட்ட பழம்பெருமை வாய்ந்த
பாரத  தேசத்திற்காக..!!
ஒரு வேளை உணவின்றி செத்துமடியும்
ஏழைகள் பற்றி தேசத்தை கட்டி ஆளுகின்ற
அரசியல்வாதிகளுக்கே அக்கறையில்லாதபோது
பாவம் மெத்தப் படித்த பட்டதாரிகளுக்கு
என்ன கவலை இருக்கப் போகிறது..!!
முகநூலில் டுவிட்டரில்
புகைப்படங்களைப் பிரசுரம் செய்து
ஐயோ!! பாவம் ஏழைகள் உணவின்றித்
தவிக்கிறார்கள் என்று காவியம் எழுதுவார்கள்..!!
பாரத தேசத்தின் தலைவிதியை
தலைகீழாக மாற்றப் போகிறேன்
என்று வீரகாவியம் எழுதுவார்கள்..!!
இதோ நான் எழுதிக் கொண்டிருக்கிறேனே
வலைப்பூவில் வீரகாவியம்.. அதுபோல..!!
நான் செயல்களை செய்துவிட்டு
எழுதுகிறேன்..!!
மற்றவர்களின் படைப்புகளை
பகிர்ந்து கொள்ளாமல்
என்னுடைய செயல்களை மட்டுமே
காவியமாக வரைகிறேன்..!!

தேசம் கடந்து கடல் கடந்து பொருளீட்டச் சென்று
தான் சென்ற தேசமே பெரிதென்று வாழுகின்ற
புண்ணிய பூமி என்று வாழுகின்ற
பிறந்த பாரத மண்ணின் பெருமை மறந்த
உன்னை இந்தியத்தாயின் கண்ணில் விழுந்த
தூசி என்று ஒதுக்க முடியாது..!
நீ என் இந்தியத்தாயின் கண்ணைக் குத்திய ஊசி..!!

எங்கள் தப்புதான்
சிறுவயதில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை
உன் சட்டையில் ஊசியால் குத்தியிருக்கக்கூடாது..!
இதயத்தில் ஆணியாய் அடித்திருக்க வேண்டும்..!!

No comments:

Post a Comment