Sunday, May 25, 2014

12 years a Slave - 2013 ம் ஆண்டில் ஆஸ்கர் விருது வென்ற படம்

இரண்டு நாளுக்கு முன்பு நான் எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் அண்ணன் அவர்களுடன் 2013 ம் ஆண்டில் மூன்று ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற திரைப்படமான 12 Years a Slave என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தோம். மனதில் ஈவு இரக்கமற்ற கல் மனது படைத்தவர்களால் மட்டும்தான் கண்ணீர் சிந்தாமல் பார்க்கமுடியும். ஒவ்வொரு காட்சிகளுமே மனசாட்சியை உலுக்கக்கூடியது. சாலமன் என்ற நீக்ரோ மனிதரால் எழுதப்பட்ட நாவலை மையமாக வைத்து, உண்மைக் கதையை படமாக்கி இருக்கிறார்கள். ஹேரியத் பீச்சர்ஸ் ஸ்டோவின் நாவலான டாம் மாமா குடில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தது. 1850 ம் ஆண்டுகளில் நடக்கும் கதைக்களம். ஆனால் அப்போது 12 Years a Slave என்ற நாவல் கவனம் பெறாதது வருத்தத்திற்குரிய விசயம்தான். இப்போது திரைப்படமாக வந்த பிறகு உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம்..!


அமெரிக்கா என்ற ஒரு நாடு கறுப்பின மக்கள் மீது எந்த அளவிற்கு கொடூரமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்பதை இந்த படத்தைப் பார்ப்பத்தின் மூலம் உணர முடிகிறது. ஒரு மனித சமுதாயத்தை எந்த அளவிற்கு இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது, இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது. கறுப்பின மக்களின் செத்துப்போன பிணங்களின் மீது தங்களுடைய நல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்பதை உணர முடிகிறது. 


அமெரிக்க நாட்டின் கொலை செய்தவர்களின் பட்டியலை சொன்னால் வியப்பு மேலிடும். ஆப்ரஹாம் லிங்கனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்கள். மார்ட்டின்லூதர்கிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்கள். சதாம் உசேனைத் தூக்கிலிட்டார்கள். லிபியாவின் மும்மர் கடாபியை கொலை செய்தார்கள். ஒசாமா பின்லாடனைக் சுட்டுக் கொன்றார்கள். சிலி நாட்டு அதிபர் அல்வேடர் சயாண்டோவை அதிபர் மாளிகையிலேயே குடும்பத்தோடு குண்டு வீசிக் கொன்றார்கள். அர்ஜென்டினா நாட்டின் சேகுவேராவைக் கொலை செய்தார்கள். ஜப்பான் நாட்டின் மீது நாசகார அணுகுண்டினை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்றதோடு, ஆயிரக்கணக்கான மக்களை அனாதையாக்கினார்கள். ஈராக் நாட்டின் மீது குண்டு வீசி அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கான பேரை அனாதை யாக்கினார்கள். தென்அமெரிக்க அதிபர்கள் பதினான்கு பேரை கொலை செய்திருக்கிறார்கள். இன்னும் உலகை அதிகாரம் செய்வதற்கு கோடிக்கணக்கான மக்களை கொள்வதற்கும் தயங்க மாட்டார்கள். இப்படியாக பட்டியலை மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகலாம்..!! 


இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் மேற்சொன்ன விசயங்களை விட 
அதிபயங்கரமானவை. இரண்டு நூற்றாண்டுகள் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக வைத்திருந்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த இரத்தக் கரை படிந்த அத்தியாத்தை பக்கம் பக்கமாக உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் எழுதிக் கொண்டி -ருக்கிறார்கள். அமெரிக்கர்களால் ஒரு வரியைக் கூட மாற்றி எழுதச் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு உலகத்திலேயே கொடூரமானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் முந்தைய தலைமுறை இப்படி இருந்திருக் -கிறார்கள். இப்போது உள்ள அமெரிக்கர்களையும் அப்படிச் சொல்ல முடியாது. மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் தன்னுடைய மென்பொருளின் மூலம் உலகையே தன் வசம் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தாரின் வலைப்பூ, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை உருவாக்கி உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். உலகையே மாற்றி இருக்கிறார்கள். அதற்கு நாம் நூற்றாண்டுகளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறோம்..!! ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்களாக இருக்கும் பட்சத்தில் மக்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது..!!

No comments:

Post a Comment