Monday, July 14, 2014

ஹிந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரை - 14.07.14

இப்படிக்கு இவர்கள் பகுதியில் கவிஞர்.அ.வெண்ணிலா அவர்களின் கட்டுரை: மலைக்க வைக்கும் வரவேற்பு!!

"தி இந்து" வில் ஒவ்வொரு முறையும் கட்டுரை வெளியாகும்போது பெரும் வரவேற்பு கிடைப்பது வழக்கமானதுதான். ஆனால், "என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி" என்ற என்னுடைய கட்டுரை, தி இந்து வில் வெளிவந்த நிமிடத்திலிருந்து கிடைத்துவரும் வரவேற்பு என்னைத் திகைக்க வைக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த தொலைபேசி அழைப்புகள், இந்த நிமிடம் வரை தொடர்கின்றன. 300 க்கும் மேலான அஞ்சல்கள் குவிந்திருந்த என் மின்னஞ்சல் பெட்டி, வலைத்தளங்களில் செய்தியை எனக்கு முன்பாக பகிர்ந்துகொண்டிருந்த முகமறியா நண்பர்கள்... எல்லாரும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்கள். கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள், முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள், என்று எல்லாத் தரப்பினரின் குரல்களும் ஒருமித்து ஒலித்தன. தனியார் பள்ளிகளின் மதிப்பெண் ஓட்டப்பந்தயத்தில் தோற்றுப்போய்த் தழும்புகளோடு உள்ள பலர் தங்களின் துயர கணங்களை நினைவு கூர்ந்தார்கள். தங்கள் பிள்ளைகளின் அமைதியான மனநிலையைக் குலைத்துவிட்டதற்காக இப்போது வருந்துவதாகச் சிலர் கூறினார்கள். பலர் நிச்சயம் அடுத்துவரும் ஆண்டுகளில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கப்போவதாக உறுதிகூறினார்கள்.பலர் துணிச்சலான முடிவு என்றார்கள். திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு பேராசிரியராக(இயற்பியல்) இருக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர், "உங்கள் மகளின் பள்ளிக்கு வந்து விடுமுறை நாளில் பிள்ளைகளுக்கு இயற்பியல் கற்றுத்தருகிறேன்" என்று என்னிடம் உறுதியளித்திருக்கிறார்.
மாற்றத்துக்கான ஒரே ஒரு சிறு அடியை எடுத்து வைத்தவுடன் கிடைக்கும் வரவேற்பும் நம்பிக்கை குரல்களும், ஆதரவுக் குரல்களும் வியக்க வைக்கின்றன. இன்னும் நம் சமூகத்தின் பொதுவெளியில் மாற்றங்களை ஆதரிக்கும் வலுவான குரல்கள் ஓய்ந்துவிடவில்லை என்பது இன்னும் என்னை உற்சாகம் கொள்ளச் செய்கிறது. இதுபோன்ற ஒத்த கருத்துடையவர் கள் கைகோர்த்தால் அரசுப் பள்ளிகளை, அவற்றின் பழைய கம்பீரத்துடன் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை வலுவடைகிறது. இது என்னால் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவராலும் முடியும். அரசுப் பள்ளிகளை நம் பிள்ளை களின் பள்ளிகளாக்குவோம். அவற்றின் பெருமையை மீட்டெடுப்போம்..!!

கவிஞர் அ.வெண்ணிலா, எழுத்தாளர், வந்தவாசி

சுயநலமில்லாமல், தன்னலமில்லாமல் நாம் ஒரு விஷயத்தை தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுத்துகையில், இந்த பிரபஞ்சமே நம்முடைய சொல்லுக்கு கட்டுப்படும்..!! உலகையே வென்றுவிடலாம்..!!

          -- சுவாமி விவேகானந்தர் 

No comments:

Post a Comment