Thursday, December 4, 2014

காவியத் தலைவன்

இயக்குநர் வசந்தபாலன் அவர்கள் "காவியத் தலைவன்" திரைக்காவியம் மூலம் நாடக் கலைக்கு உயிரூட்டியுள்ளார். அற்புதமான கதைக்களம், சிறந்த வசனம், சிறந்த ஆடை வடிவமைப்பு என்று அமர்க்களப்படுத்தியுள்ளார்.இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, படத்திற்கு சங்கநாதமாக ஒலிக்கிறது!


நடிகர்கள் பிரித்திவிராஜ், சித்தார்த் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். அநாதையான சித்தார்த்தை, பிரித்திவிராஜ் 'நாசரின்' நாடக் கம்பெனியில் சேர்த்துவிடுகிறார். இருவரும் நாடகக் கம்பெனியில் நடிப்பில் அசத்துகிறார்கள். "ராஜபார்ட்" கதாபாத்திரத்தில் யார்? நடிக்க வேண்டும் என்பதில் பிரித்திவிராஜுக்கு பொறாமை ஏற்படுகிறது. 

பிரித்திவிராஜின் பொறாமைக் குணம், சித்தார்த்தின் வாழ்க்கையில் துன்பங்களை ஏற்படுத்துகிறது. சிவகங்கை அரண்மனை 'ஜமீன்' குடும்பத்து பெண்ணின் காதலில் சிக்குண்ட சித்தார்த், இந்தக் காதலாலே நாடக் கம்பெனியில் பெரும் பூகம்பம் ஏற்பட்டு கம்பெனியிலிருந்து வெளியேற்றப்படு கிறார். சித்தார்த் மீண்டும் அநாதையாகிறார். 

நடிகை வேதிகாவை பிரித்திவிராஜ் விரும்புகிறார். வேதிகாவோ சித்தார்த்தை நேசிக்கிறார். சித்தார்த்தோ ஜமீன் குடும்பத்து பெண்ணை நேசிக்கிறார். இப்படியாக காதல் கதைக் களம் செல்கிறது. சித்தார்த்தின் காதல் பிரித்திவி ராஜ் மூலம் நாசருக்கு தெரியவரும்போது ஏற்படும் பிரளயக் காட்சிகள், மனதைக் கொல்லுகிறது. காதல் தோல்வியால் ஜமீன் குடும்பத்துப் பெண், மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். பல இன்னல்களுக் கிடையே மீண்டும் சித்தார்த், பிரித்திவிராஜுடன் நாடகக் கம்பெனியில் இணைகிறார். சித்தார்த்தின் அனல் தெறிக்கும் சுதந்திரப் போராட்ட நாடக் காட்சிகள், அற்புதம்! இறுதியில் வேதிகாவின் காதல், என்னவாகிறது என்பதுதான் படத்தின் முடிவு. 

கிளைமாக்ஸ் காட்சியை இந்த அளவிற்கு நினைத்துப் பார்க்க முடியாத வகையில் வைப்பார் என்று, யாரும் எதிர்பார்க்கவில்லை. "காவியத் தலைவன்" திரைக்காவியம் மூலம் இயக்குநர் வசந்தபாலன் அவர்கள், தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்ததுடன், அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்..!

No comments:

Post a Comment