Thursday, June 19, 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை இல்லாத அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக குளக்கட்டாக்குறிச்சி கிராமம் தேர்வு..!!


11.06.14 தேதியன்று கிராமத்து வலைப்பூவில் பதிவு செய்த கட்டுரை..!!

நமது கிராமத்தில்  கருப்பசாமி யாதவ், கருப்பாயி அம்மாள் அவர்களின் புதல்வர் கண்ணன் அவர்கள் கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருடன் உடன் பிறந்த சகோதரி காளீஸ்வரியும்  நானும்  ஒரே வயதுள்ளவர்கள். கண்ணன் என்னை விட மூன்று வயது இளையவர். இந்த வலைப்பூவை தொடங்குவதற்கு முன்பு கிராமத்தின் கடந்த காலத்தைப் பற்றி நிறைய பேசி இருக்கிறோம். எதிர்காலத்தில் என்ன மாற்றத்தை செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதித்திருக்கி றோம். இணையதளத்தில் நமது கிராமத்திற்கென்று வலைப்பூ உருவாக்கி, உலக அளவில் கவனத்தைப் பெறுவதற்காக கடுமையான உழைப்பை செலுத்த உள்ளேன். நமது கிராமம் இந்திய அரசின் தேசிய விருதையும், சிறந்த இலக்கியப் படைப்புள்ள வரலாற்று ஆவணம் மற்றும் பாரம்பரிய வரலாறு கொண்ட கிராமமாக உருவாக்க முயற்சி செய்யப் போகிறேன் என்று எனது தந்தையார் காலமான ஒரு மாதம் கழித்து, கண்ணனுடன் ஒரு மாலைப் பொழுதில் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னேன். இதைச் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல..!! நிறைய மெனக்கெட வேண்டும். பொருட்செலவு என்பதை விட அதிக நேரம் கிராமம் குறித்து சிந்தித்து, பழைய கால நினைவுகளை பின்னோக்கிச் சென்று ஆராய்ந்து, வரலாற்றுக் காவியம் எழுத வேண்டும். மக்களின் புகைப்படங்கள் மிகவும் முக்கியமான சான்றுகள். நாம் இந்த பூமியை விட்டுச் செல்லும் வரை பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு மாபெரும் காலப்பெட்டகமாக உருவாகும் என கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். ஆனால் ஏனோ தெரிய வில்லை கண்ணனுடைய புகைப்படத்தை கேமராவில் பதிவு செய்யவே இல்லை. பார்க்கும்போதெல்லாம் பேசிக் கொண்டே மறந்துவிடுவேன். 02.06.14 தேதியன்று கிராமத்து அஞ்சல் துறையின் முன்னோடிகள் என்ற தலைப்பில் தீண்டாமைக் கொடுமை குறித்த கட்டுரையை இந்த கிராமத்து வலைப்பூவில் பதிவு செய்திருந்தேன். ஒரு வருடத்திற்கு முன்புDr.அம்பேத்கார் திரைப்படம் பார்த்த பாதிப்பு என்னுள் வெகு நாட்களாக இருந்து கொண்டே இருந்தது. பல நூற்றாண்டு களாக தலித் மக்கள் சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை நினைத்துப் பார்க்கும்போது, இதயமே வெடித்து விடிவது போல் இருந்தது. இந்த வலைப்பூவில் நான் கட்டுரைகளை பதிவுசெய்யும்போது எந்த மாதிரியான எதிர்மறையான கருத்துக்களையும் பிரதிபலிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். நேர்மறையான ஆக்கப்பூர்வமான கிராமம் குறித்த வரலாற்று செய்திகளை பதிவுசெய்வதன் மூலம், எதிர்காலத்தில் இந்த கிராமத்து வலைப்பூ முன்மாதிரியான வலைப்பூவாக இருக்க வேண்டும் என்பதில் அதிக முயற்சி எடுத்துக் கொள்கிறேன்..!!

வலைப்பூ முகவரி: குளக்கட்டாக்குறிச்சி கிராமம் 

நேற்று காலை வேளையில் திடீரென்று நண்பர் கண்ணன் அலைபேசியில் அழைத்தார். திருநெல்வேலி மாவட்டத் தில் தேர்வு செய்யப்பட 485 கிராமங் களில் நமது கிராமம் தீண்டாமை இல்லாத மத நல்லிணக்கத்துடன் கூடிய கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, 09.06.14 அன்று கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பத்து லட்சத்திற்கான பரிசுத்தொகையைப் பெற்றிருக்கிறார் என்ற செய்தியை சொன்னபோது, எல்லையற்ற மகிழ்ச்சி உண்டானது. செய்தி தினமணி நாளிதழில் வெளியாகி யிருந்தது. இணைய தளத்தில் திருநெல்வேலி பதிப்பில் செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். இந்த விருது ஒட்டு மொத்த கிராம மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம். கிராமத்து மக்களில் நானும் ஒருவன் என்பதில் இதயம் பூரிப்படைகிறது. கிராமத்து பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பு பாலசுப்ரமணியம் அவர்களை அலை பேசியில் அழைத்து என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன். சிறு வயதிலிருந்தே நீண்ட கால நண்பர். இவருடைய துணைவியார் பஞ்சாயத்துத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு மாதம் கழித்து, கிராமத்தின் மேம்பாடு குறித்து சில விசயங் களை  பகிர்ந்து கொண்டேன். அதில் ஒன்றுதான் கிராமத்து வலைப்பூ..!!  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே நமது கிராமத்து வலைப்பூ குறித்த செய்தியை கடிதமாக எழுதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். எனது முயற்சிகளுக்கு அவருடைய மின்னஞ்சலில் இருந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார். இந்திய அளவில் சிறந்த கிராமமாக தேசிய விருது பெறுவதற்காக மாவட்டக் கருவூலத்திலிருந்து 1750 ம் ஆண்டிலிருந்து 1980 ம் ஆண்டு வரைக்கான கிராமத்தின் பதிவேடுகளை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். இரண்டு முறை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சென்று பார்த்து விண்ணப்பம் செய்தேன். பிரிட்டீஷ் காலனி ஆட்சி இந்தியாவில் நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட கிராமம் குறித்த விவரங்கள் கூடிய விரைவில் கிடைத்துவிடும். பதிவேடுகள் கிடைத்த பின்பு, வரலாற்று ஆவணங்கள் உருவாக்குவதுதான் இமாலயப் பணி..!! தற்போது தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் எழுதிய வரலாற்று ஆவணமான திருநெல்வேலி சரித்திரம் என்ற நூலைப் படித்து, அதிலுள்ள குறிப்புகளைக் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த ஒரு வருடத்தில் கிராமம் குறித்த தகவல்களை பெற்றுள்ளேன். அதை விட ஒரு மாபெரும் இமாலயப் பணி, கிராமத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை உலக வரலாற்றின் பக்கங்களில் காலத்தால் அழியாத பெயராக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது..!! இமாலயக் கனவு நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை..!!

No comments:

Post a Comment